”பிரதமர் மோடி சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
மதுராந்தகத்தில் இன்று ஜனவரி 23-ந் தேதி நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலாவது பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு ”டபுள் எஞ்சின்” சர்க்கார் தேவை என்றார். தமிழ்நாட்டிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என மோடி பேசியிருந்தார்.
இதனை விமர்சித்துள்ள முதல்வர் ஸ்டாலின், “ மாண்புமிகு பிரதமர் அவர்களே…
ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது.
கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க…
நீங்கள் சொல்லும் “டபுள் எஞ்சின்” மாநிலங்களான உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பீகாரைவிட, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என உங்கள் “டப்பா எஞ்சின்” நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது.
தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும் NDABetraysTN என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.
தில்லியின் ஆணவத்துக்குத் தமிழ்நாடு_தலைகுனியாது! என பதிலடி கொடுத்துள்ளார்.
