பீதி அடையத் தேவையில்லை: மத்திய உள்துறை அமைச்சகம்!

Published On:

| By Balaji

நாட்டில் தற்போது போதுமான மருத்துவ ஆக்ஸிஜன் உள்ளது, ஆனால் அதனை எடுத்துச் செல்லும் போக்குவரத்துதான் சவாலாக உள்ளது. எனவே யாரும் பீதி அடையத் தேவையில்லை” என்று மத்திய உள்துறையின் கூடுதல் செயலாளர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவிவருகிறது. அதேநேரம்,

இந்தியாவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதையடுத்து வெளிநாடுகளில் இருந்து ஆக்ஸிஜன் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றுக்கு எதிராக செயல்படும் உயிர்காக்கும் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாக செய்திகள் பரவுகின்றன.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 26) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை கூடுதல் செயலாளர் பியூஷ் கோயல்,

“இந்தியாவில் போதுமான அளவு மருத்துவ ஆக்ஸிஜன் கையிருப்பில் உள்ளது. அதேநேரம் அவற்றை எடுத்துச் செல்ல போக்குவரத்துதான் சவாலாக இருக்கிறது.

டேங்கர்கள் இயக்கத்தில் எடுக்கும் நேரத்தைக் குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுகின்றன.

எனவே யாரும் பீதி அடையத் தேவையில்லை. தற்போது மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு போதுமான ஆக்சிஜன் உள்ளது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். திடீரென டேங்கர்களின் தேவை அதிகரித்ததால் போக்குவரத்து ஒரு சவாலாக உள்ளது. நேரத்தைக் குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுகின்றன”என்று கொரோனா நிலைமை குறித்த கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் கூறினார்.

“ஆக்ஸிஜன் டேங்கர்களை வெளிநாட்டிலிருந்து கொள்முதல் அல்லது பணியமர்த்தல் அடிப்படையில் இந்தியா ஆர்டர் செய்கிறது. தற்போதைய நிலையில்

ஆக்ஸிஜன் டேங்கர்களின் இயக்கத்தை நாங்கள் கண்காணித்து வருகிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 3.52 லட்சமாக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து இது மிக உயர்ந்த ஒற்றை நாளின் அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

**-வேந்தன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share