திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு பக்தர்கள் பிளாஸ்டிக் பைகளை எடுத்து வர வேண்டாம் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வேண்டுகோள் விடுத்துள்ளார். Don’t bring plastic bags to Karthigai Deepam festival
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
நாளை (நவம்பர் 22) மகா தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் வரும் 26ஆம் தேதி ஏற்றப்படுகிறது. அன்று சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மகா தீபத்தை தரிசித்து கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி 14 கி.மீ. தூரம் உள்ள கிரிவல பாதை முழுவதும் தூய்மைப்படுத்தும் பணி நேற்று நடந்தது.
தூய்மை பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்து தூய்மை பணியில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “தீபத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். பக்தர்களின் வசதிக்காக நகராட்சி, நெடுஞ்சாலை துறை, பொதுப்பணி துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் பலர் ஒட்டுமொத்த தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கிரிவல பாதையில் கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கழிவறைகளில் தண்ணீர் பிரச்சனை ஏற்படாத வகையில் தேவனந்தல் கிராமத்தில் புதிதாக கிணறு வெட்டப்பட்டுள்ளது.
அதில் இருந்து ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு கழிவறைகளுக்கு தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
கிரிவலம் வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரக்கூடாது. இதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பல்வேறு இடங்களில் நடைபாதையில் கடைகள் வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் கடைகள் வைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பூத நாராயண பெருமாள் கோயில் அருகே அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் பார்க்கிங் வசதி, குளியல் அறை, கழிப்பறை போன்றவை நவீன வசதிகளுடன் சர்வதேச தரத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
ராஜ் Don’t bring plastic bags to Karthigai Deepam festival
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னை: தெரு நாய்கள் கடித்ததில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்!
திருப்பதி: வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கு இலவச டிக்கெட்!
விசைத்தறியாளர்கள் போராட்டம்: ரூ.2,000 கோடி உற்பத்தி இழப்பு!
டிச. 2-ல் துவங்கும் ‘Pro Kabaddi 10’: தமிழ் தலைவாஸ் அட்டவணை இதோ!