ராகுல் காந்தி போல் செயல்படாதீர்கள் என்று என்.டி.ஏ. எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் நேற்று மக்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்து பேசினார்.
பிரதமர் மோடிக்கு கடவுளுடன் நேரடி தொடர்பு உண்டு என சிவன் படத்தை கையில் வைத்துகொண்டு கிண்டல் செய்யும் விதமாக பேசியிருந்தார். சபாநாயகர் ஓம்.பிர்லாவையும் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இன்று (ஜூலை 2) ராகுல் உரையில் இருந்து 11 பகுதிகள் நீக்கம் செய்யப்பட்டன.
இதற்கிடையே பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய மோடி, “மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடந்துகொண்டது போல நடந்துகொள்ள வேண்டாம்” என்று என்.டி.ஏ கூட்டணி எம்.பி.களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் அவர், “ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, எந்தப் பிரதமரும் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெறவில்லை. ஆனால் ஒரு டீ விற்பவரால் எப்படி மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற முடிந்தது என சிலரால் பொறுத்துகொள்ள முடியவில்லை.
நாடாளுமன்றத்தில் என்.டி.ஏ. எம்.பி.க்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். நாட்டு மக்களின் வளர்ச்சியே நமது குறிக்கோள். தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க்கள் மக்களின் நலனுக்காக பாடுபடவேண்டும். நாடாளுமன்ற மரபு மற்றும் விதிமுறைகளை பின்பற்றி நடந்துகொள்ள வேண்டும்” என்று கூறினார்.
இந்த கூட்டத்தை தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு, “ஒவ்வொரு எம்.பி.யும் தங்கள் தொகுதி தொடர்பாக விதிகளின்படி அவையில் பேச வேண்டும்.
தண்ணீர், சுற்றுச்சூழல், சமூகம் பற்றிய விவரங்களை நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு நல்ல எம்.பி.யாக மாறுவதற்கு அவசியமான நாடாளுமன்ற விதிகள், ஜனநாயக முறை மற்றும் நடத்தை ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும் என்று என்டிஏ எம்பிக்களை பிரதமர் கேட்டுக் கொண்டார்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா