அரசுப் பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அளித்த பூரணம் அம்மாளுக்கு வரும் குடியரசு தின விழாவில் அரசின் சார்பில் சிறப்பு விருது வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மதுரை ஒத்தக்கடை அருகில் உள்ள கொடிக்குளம் அரசு பள்ளிக்கு ரூபாய் 7 கோடி மதிப்பில் உள்ள 1.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார் ஆயி அம்மாள் என்ற பூரணம். இவர் கனரா வங்கியில் எழுத்தராக பணி செய்து வருகிறார்.
ஆயி அம்மாளின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்த நிலையில், மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் அண்மையில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து ஆயி அம்மாளை தொலைபேசியில் அழைத்து நன்றி தெரிவித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மதுரையில் வரும் 29ஆம் தேதி நடைபெற இருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் மாநாட்டில் அவர் கவுரவிக்கப்படுவார் என்று நேற்று அறிவித்தார்.
இந்த நிலையில் ஆயி அம்மாளின் கொடையுள்ளத்தை போற்றும் வகையில் குடியரசு நாள் விழாவில் அரசின் சார்பில் சிறப்பு விருது வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்விதான் உண்மையான, அழிவற்ற செல்வம். ஒரு தலைமுறையில் பெறும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாக அமையும் என்பதை உணர்ந்து தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்குக் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காகக் கொடையாக அளித்துள்ளார் மதுரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள் என்கிற பூரணம்.
ஆயி அம்மாளின் கொடையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள். கல்வியையும் கற்பித்தலையும் உயர்ந்த அறமாகப் மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக விளங்கும் ஆயி அம்மாளின் கொடையுள்ளத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் வருகிற குடியரசு நாள் விழாவில் அரசின் சார்பில் அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும்” என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
டெல்லியில் பொங்கல் கொண்டாடிய மோடி
இளம் வீரரைப் பார்த்து கோபமாகக் கத்திய ரோஹித்… உண்மையில் என்ன நடந்தது?