ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் கைதான முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா நரகத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்று 2021 ஆம் ஆண்டு வரை பதவியில் நீடித்தார். கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிட்ட போது, அவருக்கு ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் உடன் ரகசிய உறவு இருந்ததாக தகவல் வெளியாகி, அமெரிக்காவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
இந்த விவகாரத்தை மூடி மறைப்பதற்காக அவரின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலமாக ரூ.1.07 கோடி பணத்தை ட்ரம்ப் கொடுத்தார் என்றும், அது அவரது தேர்தல் வரவு செலவு கணக்கில் சட்ட ரீதியிலான செலவு என்று பதிவு செய்யப்பட்டது என்றும் ட்ரம்ப் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.
இதனால் ட்ரம்ப் மீது தேர்தல் பிரச்சார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டுப் பதிவு செய்ய கிராண்ட் ஜூரி உறுப்பினர்கள் வாக்களித்ததன் அடிப்படையில் அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது.
இதனால் அவர் கைது செய்யப்படலாம் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் டொனால்ட் ட்ரம்ப் நேற்று (ஏப்ரல் 4) நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்றத்தில் ஆஜரான டொனால்ட் ட்ரம்பை காவல்துறையினர் கைது செய்தனர். இதன்மூலம் குற்றவியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முதல் அமெரிக்க முன்னாள் அதிபர் என்ற அவப்பெயரை டொனால்ட் ட்ரம்ப் பெற்றார்.
பின்னர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையின் போது, தன் மீது குற்றங்கள் இல்லை என்று வாதிட்டார். மேலும் ”நம் நாடு நரகத்திற்குப் போகிறது. உலகம் ஏற்கனவே பல காரணங்களுக்காக நம்மைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறது.
நான் செய்த ஒரே குற்றம் நம் தேசத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராக அச்சமின்றி போராடியதுதான்” என்று நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 4 ஆம் தேதி விசாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் அடுத்த ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் அவருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா
வேளாண் மண்டலம் பாலைவனமாக மாறும்!: தலைவர்கள் கண்டனம்
தங்கம்: வரலாறு காணாத விலை உயர்வு!
அருணாசலப் பிரதேசத்தின் 11 இடங்களுக்கு புதிய பெயரை வெளியிட்ட சீனா!
டிஜிட்டல் திண்ணை: ’கெத்து’ காட்டிய எடப்பாடியின் கூட்டங்கள் ரத்து பின்னணி!
