தமிழ்நாடு முழுவதும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட 9.60 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். Dog bite vaccination for 9.60 lakh people
சட்டப்பேரவையில் பேசிய கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரி, “எனது தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் விவசாயிகளை விஷ ஜந்துக்கள் ஏதேனும் கடிக்க நேர்ந்தால் அவர்களை நீண்ட தூரம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது. இதன் காரணமாக சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே பாலவிடு துணை சுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தி விஷக்கடி மருத்துவ வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த இரண்டு ஆண்டுகளில் பாம்பு கடிக்கு அந்தந்த துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து இருப்பு வைக்கப்பட்டிருந்த காரணத்தால் 34,869 பேர் பாம்புகடிக்கு தடுப்பூசி மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். 9.60 லட்சம் பேருக்கு நாய்க்கடிக்கான தடுப்பூசி போடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள்.
கரூரை பொறுத்தரை 32,610 நபர்களுக்கு நாய்க்கடி தடுப்பூசியும், 1,193 பேருக்கு பாம்புக்கடி தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது” என்று கூறினார்.
தமிழ்நாட்டில் நாய்க்கடியால் ரேபிஸ் நோய் பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படுவது கடந்த ஓராண்டில் ஏறக்குறைய இரு மடங்கு அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத் துறை ஆய்வில் தெரியவந்தது என்பது குறிப்பிடத்தகக்து. Dog bite vaccination for 9.60 lakh people