மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆவது மாநாடு, இன்று (ஏப்ரல் 2) தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. Prakash Karat meets MK Stalin
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிமன் பாசு கொடியேற்றி மாநாட்டை இன்று தொடங்கி வைத்தார். மாநாட்டில் சிபிஎம் மத்தியக் குழு ஒருங்கிணைப்பாளரான பிரகாஷ் காரத், கேரள முதல்வர் பினராயி விஜயன், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மாநாட்டின் ஒரு பகுதியாக நாளை (மார்ச் 3) நடைபெறும் மாநில உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடகா வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கெளடா ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
இந்தநிலையில், பிரகாஷ் காரத் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு இரு கட்சி வட்டாரத்திலும் ஏற்பட்டுள்ளது.

2024-ஆம் ஆண்டு சிபிஎம் பொதுச்செயலாளராக இருந்த சீதாராம் யெச்சூரி மறைந்ததை தொடர்ந்து, கட்சியின் இடைக்கால ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் காரத் தேர்வு செய்யப்பட்டார். பிரகாஷ் காரத் சமீபத்தில் 24 ஆவது மாநாட்டை ஒட்டி வெளியிட்ட அரசியல் சுற்றறிக்கையில் மோடி அரசை பாசிச அரசு என்று வரையறுப்பதில் தயக்கம் காட்டப்பட்டிருந்தது. இது அறிவுஜீவிகள் மத்தியில் பலத்த விமர்சனங்களை உருவாக்கியது.

தேசிய அளவில் அப்படி என்றால், மாநில அளவில் பிரகாஷ் காரத் திமுகவோடு அவ்வளவு இணக்கம் காட்டாதவர் என்று கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே சொல்கிறார்கள். ஏற்கனவே, திமுக அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
இந்தநிலையில், வரும் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் அதிக இடங்களில் போட்டியிட பிரகாஷ் காரத் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
திமுக கூட்டணியில் தொடர இயலாத சூழல் ஏற்பட்டால், விஜய்யுடன் அணி சேரக்கூட பூர்வாங்க ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன என்கிறார்கள். இதுகுறித்து மார்ச் 30 டிஜிட்டல் திண்ணையில் காரத்தைக் கூட்டும் காரத்- தள்ளிச் செல்லும் மார்க்சிஸ்ட்… திமுக கூட்டணிக்குள் உஷ்ணம்! என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இத்தகைய அரசியல் சூழலில், மதுரையில் நடைபெறும் மாநாடு மார்க்சிஸ்ட் கட்சியின் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான செயல் திட்டங்களை தீர்மானிக்கக்கூடிய மாநாடாக நடைபெற உள்ளது. இதில் கூட்டணி விவகாரம் தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின்- பிரகாஷ் காரத் இடையிலான சந்திப்பின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. Prakash Karat meets MK Stalin