வன்னியர் சங்கம் சார்பில் கடந்த மே 11-ஆம் தேதி மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்றது. இந்தநிலையில், ஆகஸ்ட் 10-ஆம் தேதி வன்னியர் சங்கம் சார்பாக மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் கடலோர பகுதியில் மகளிர் மாநாடு நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். vanniyar sangam mahalir conclave
இந்தநிலையில், வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, மயிலாடுதுறை எஸ்.பி ஸ்டாலினை சந்தித்து மாநாட்டிற்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தார்.
அந்த கடிதத்தில், “வருகின்ற ஆகஸ்ட் 10 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் வன்னிய மகளிர் பெருவிழா மாநாடு பாமக நிறுவன தலைவர் மற்றும் வன்னியர் சங்கம் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி ஆகிய எனது மற்றும் மகளிர் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற உள்ளது.

இந்த மகளிர் மாநாட்டிற்கு அனுமதியும், பாதுகாப்பும் வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நடைபெற உள்ள மாநாடு பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்க்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் மிகுந்த கட்டுப்பாட்டுடனும்,அமைதியுடனும்,காவல்துறையின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டும் நடத்திக்கொள்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேற்குறிப்பிட்டுள்ள வன்னிய மகளிர் மாநாடு பூம்புகார் இதே இடத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்ததுள்ளது என்பதையும் தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
கடிதத்தை பெற்றுக்கொண்ட எஸ்.பி.ஸ்டாலின், அந்த இடத்தை பற்றி ஆலோசனை செய்துவிட்டு அனுமதி பற்றி தகவல் சொல்கிறேன் என அனுப்பி வைத்தார்.
இந்த மாநாடு நடத்த திட்டமிட்டுள்ள இடம், மத்திய, மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும், வனம், சுற்றுலா, மீன்வளம் உள்ளிட்ட மூன்று துறைக்கும் சொந்தமான இடமாக இருப்பதால் அனுமதி கொடுப்பதில் சிக்கல் ஏற்படும் என்கிறார்கள் காவல்துறை வட்டாரங்களில்.
இதுதொடர்பாக, பாமக வட்டாரங்களில் விசாரித்தபோது, “காவல்துறை அனுமதி கொடுக்கவில்லையென்றால், நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று திட்டமிட்டபடி மாநாடு நடத்துவோம் என்கிறார்கள்” உறுதியாக. vanniyar sangam mahalir conclave
