தாக்குதலை தடுக்க சட்ட அமைப்பு : மருத்துவர்கள் கோரிக்கை!

Published On:

| By Balaji

மருத்துவர்கள் மீதான தாக்குதலை தடுக்க மாநில அளவிலான சட்ட அமைப்பை உருவாக்க வேண்டும் என கர்நாடக மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடகாவில் சிக்கமகளூரு மாவட்டம் தரிகேர் தாலுகாவில் உள்ள பசவேஸ்வர் பாலி கிளினிக்கில் தீபக் என்ற 50 வயதான மருத்துவர் வேலை பார்த்து வருகிறார். கடந்த மே 25 ஆம் தேதி டெங்குவால் பாதிக்கப்பட்ட 6 வயது குழந்தை சிகிச்சைக்காக இந்த கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டார். இந்த குழந்தைக்கு மருத்துவர் தீபக் சிகிச்சை அளித்துள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி மே 29ஆம் தேதி அந்த குழந்தை உயிரிழந்தது. குழந்தை இறப்புக்கு மருத்துவர் தீபக் தான் காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

ADVERTISEMENT

இந்நிலையில், மே 31ஆம் தேதி மதியம் 3 மணியளவில் சைக்கிளில் தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மருத்துவரை நான்கு பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கியது. இதில், பலத்த காயமடைந்த மருத்துவர் சிவமோகாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேரை கைது செய்த போலீசார், “ 6 வயது குழந்தை இறப்புக்கு மருத்துவர் தீபக்தான் காரணம் என்று குற்றம் சாட்டி வந்த உறவினர்கள்தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்” என கூறியுள்ளனர்.

ADVERTISEMENT

மருத்துவர் மீதான தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்துள்ள கர்நாடக மருத்துவர்கள் சங்கம், இதுபோன்ற சம்பவங்களை விசாரிக்க மாநில அளவிலான சட்ட அமைப்பை உருவாக்க வேண்டும் என முதல்வர் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில், “கடந்த 8-10 மாதங்களில் சுகாதாரப் பணியாளர்கள் மீது 12 க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் பதிவாகியிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இது தவிர, நூற்றுக்கணக்கான அச்சுறுத்தல்கள், வேலைக்கு இடையூறு மற்றும் பதிவு செய்யப்படாத தாக்குதல்களும் உள்ளன. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதையும், சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவதையும் உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும். மாநில அளவிலான சட்ட அமைப்பை உருவாக்குவதுதான் இந்த பிரச்சினைக்கு சிறந்த தீர்வாகும் “ என தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் சி.என்.அஸ்வத் நாராயண் கூறுகையில், சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

நேற்று (ஜூன் 2) இந்திய மருத்துவ கழகம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எழுதிய கடிதத்தில், ”நாட்டின் பல பகுதிகளில் கொரோனா பரவும் அபாயமான காலக்கட்டதில் மருத்துவர்கள் கால நேரம் பார்க்காமல், உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கிறது. இதன் காரணமாக மருத்துவர்கள் தொடர்ந்து பணிபுரிய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற தாக்குதல்களை உடனடியாக தடுக்கவும், நாடு முழுவதும் மருத்துவர்களை பாதுகாக்கவும் தேசிய அளவிலான புதிய ஒருங்கிணைந்த சட்டத்தை உருவாக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.

**வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share