தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக மீது கடுமையான தாக்குதல்களை தொடுத்து வருகிறார். ஆனால் திமுகவின் முதல் கட்ட நிர்வாகிகள் அண்ணாமலையின் கருத்துகளுக்கு முழுமையான வீரியத்தோடு பதிலடி கொடுப்பதில்லை.
கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அண்ணாமலை வெளியிட்ட திமுக ஃபைல்ஸ் என்ற வீடியோவுக்கு எதிராக சட்ட ரீதியாக திமுகவினர் பலரும் நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு தமிழக முதல்வர் ஸ்டாலின் சார்பில் அண்ணாமலை மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
சட்ட ரீதியாக இப்படி அண்ணாமலைக்கு எதிராக திமுக விஐபிகள் எதிர்வினை ஆற்றினாலும் அரசியல் ரீதியாக திமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் அண்ணாமலையை பெரிதுபடுத்துவதில்லை என்ற குறை திமுக நிர்வாகிகளுக்கு இருக்கிறது.
இந்த நிலையில்தான் அண்ணாமலைக்கு எதிராக எதிர்வினையாற்றும் பொறுப்பையும் சுதந்திரத்தையும் திமுக இளைஞரணிக்குக் கொடுத்திருக்கிறார் இளைஞரணிச் செயலாளரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
திமுகவின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் ஜோயல் ராமநாதபுரத்திலும் தூத்துக்குடியிலும் பேசினார். அதில் மே 9 ஆம் தேதி தூத்துக்குடியில் அவர் பேசியபோது அண்ணாமலையை கடுமையாகத் தாக்கினார்.

“வாய் சவடால் பேசுகிற முன்னாள் காவல்துறை அதிகாரி அண்ணாமலை திமுகவின் லட்சோப லட்சம் தொண்டர்களில் ஒருவனான என்னோடு விவாதிக்கத் தயாரா?
மோடி ஆட்சிக்கு வந்தால் அனைவரது வங்கிக் கணக்கிலும் 15 லட்சம், மோடியின் பட்டப் படிப்பு பற்றியும் அவர் பல்கலைக் கழகத்தில் படித்தது பற்றியும், தேசப்பற்று என்ற பெயரில் நீங்கள் கையில் கட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச் பற்றியும், மோடியின் நண்பர் அதானி பற்றியும் அதானி பற்றிய ஹிண்டன்பர்க் அறிக்கை பற்றியும் …
ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை கொடுப்பேன் என்ற மோடி இதுவரை எத்தனை இளைஞர்களுக்கு வேலை கொடுத்திருக்கிறார் என்பது பற்றியும், தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த பாஜகவின் ஊழல் பட்டியல் பற்றியும், உங்கள் கூட்டணியில் இன்னும் இருக்கும் அதிமுகவினரின் ஊழல்கள் பற்றியும் என்னோடு விவாதிக்கத் தயாரா?
அண்ணாமலையே நாவை அடக்குங்கள். இல்லையேல் உங்களை அரசியலை விட்டு ஓட ஓட விரட்டியடிக்கும் வரை திமுக இளைஞரணி ஓயாது” என்று பேசினார் ஜோயல்.
ஜோயல் மட்டுமல்ல… இந்த இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய இளைஞரணி நிர்வாகிகளும் அண்ணாமலையை டார்கெட் செய்தார்கள்.
“தலைவருக்கும் சீனியர் அமைச்சர்களுக்கும் அரசு ரீதியாக ஆயிரம் பணிகள் இருக்கிறது. எனவே அண்ணாமலைக்கு இனி இளைஞரணியினரே வலிமையான பதிலடி கொடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ள உதயநிதி, அதற்கான முழு சுதந்திரத்தையும் இளைஞரணியினருக்குக் கொடுத்திருக்கிறார்.
அதன் எஃபெக்ட் தான் ஜோயல் தொடங்கி இளைஞரணியினர் பலரும் அண்ணாமலையை டார்கெட் செய்திருக்கிறார்கள் என்கின்றனர் இளைஞரணி வட்டாரத்தில்.
–வேந்தன்
