தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு… சர்வாதிகாரத்தை ஒழித்திடுவோம்: திமுக இளைஞரணி மாநாட்டு தீர்மானங்கள்!

Published On:

| By Monisha

DMK Youth Conference Resolutions

திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு இன்று (ஜனவரி 21) நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டம், புதுமை பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம், மருத்துவ திட்டங்கள் ஆகியவற்றிற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானங்கள் உட்பட மொத்தம் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தீர்மானங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டு மேடையில் வாசித்தார்.

முதலமைச்சருக்கு நன்றி

அதில் முதல் தீர்மானமாக ”இளைஞர் அணியின் மாநில மாநாட்டிற்கு அனுமதியளித்த ஜனநாயகப் பாதுகாவலர் கழகத் தலைவருக்கு நன்றி” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த தீர்மானத்தில், “கூட்டாட்சிக் கொள்கைக்கு வலிமை சேர்க்கும் வகையில், இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டையும் பன்முகத்தன்மையையும் பாதுகாக்கும் பெரும்பொறுப்பில் எவ்வித சமரசமுமின்றிப் பாடுபடும் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கொள்கை வழியில் முன்னெடுத்துச் செல்லும் கழகத் தலைவர்-தமிழ்நாடு முதலமைச்சர், கடந்த பத்தாண்டு கால மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சியில் பறிக்கப்பட்ட, தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் ஜனநாயகப் பாதுகாவலராகத் திகழ்ந்து வரும் நிலையில், தன்னால் வளர்த்தெடுக்கப்பட்ட இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு அனுமதி தந்து, அதனை மாநில உரிமை மீட்பு முழக்கமாக முன்னெடுக்கச் செய்த இளைஞர் அணியின் தாயுமானவரான கழகத் தலைவர்- தமிழ்நாடு முதலமைச்சருக்கு இந்த மாநாடு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆட்சி தொடர இளைஞரணி அயராது பாடுபடும்

”தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்க அயராது பாடுபடும் முதலமைச்சருக்கு இளைஞர் அணி என்றும் துணை நிற்கும்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதில், “மாநிலங்களின் அதிகார உரிமைகள், சட்ட உரிமைகள், நிதி உரிமைகள் உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் ஒன்றிய பா.ஜ.க அரசு பறித்து வரும் நிலையிலும் கூட, தமிழ்நாட்டை இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக முன்னேற்றுகிற வகையில், ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்ற ஒப்பற்ற சிந்தனையுடன் திராவிட மாடல் அரசைத் தலைமை தாங்கி நடத்தி வரும் இந்தியாவின் முதன்மை முதலமைச்சரின் மக்கள் நலத் திட்டங்களையும், பொருளாதார வளர்ச்சிக்கான முன்னெடுப்புகளையும் மக்களிடம் கொண்டு சேர்த்து, ஒவ்வொரு குடும்பமும் அரசாங்கத்தின் திட்டங்களால் பயன்பெறும் வகையில், சிறப்பான நிர்வாக ஆற்றலை வெளிப்படுத்தி வரும் முதலமைச்சரின் எண்ணப்படி இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு பெயர் பெறவும், தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தொடர்ந்திடவும், கழக இளைஞர் அணி அயராது பாடுபடும் என இந்த மாநாடு தீர்மானிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகும் திட்டங்கள்

”மகளிர் வாழ்வில் தன்னம்பிக்கையை வளர்க்கும் விடியல் பயணம்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதில், “முதலமைச்சரின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்கள் பலவும் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும், தமிழ்நாட்டின் அடியொற்றி, பல மாநிலங்கள் பின்பற்றுகிற வகையிலும் புகழ் பெற்றுள்ளன. முதலமைச்சராகப் பொறுப்பேற்று, தலைமைச் செயலகத்திற்குச் சென்றவுடனேயே மகளிருக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம் என்ற மகத்தானத் திட்டத்திற்குக் கையெழுத்திட்டார். மகளிருடன், திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள், அவருக்குத் துணை வருவோர் ஆகியோருக்கும் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் அளித்ததன் மூலம் 2023 டிசம்பர் மாதம் வரை இந்த விடியல் பயணம் திட்டத்தில் 404 கோடியே 6 லட்சம் முறை மகளிர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
திருநங்கையர் 24 லட்சத்து 43 ஆயிரம் முறையும், மாற்றுத்திறனாளிகள் 3 கோடியே 17 லட்சத்து 27 ஆயிரம் முறையும் பயணங்கள் மேற்கொண்டுள்ளனர். இந்த விடியல் பயணத் திட்டம் தமிழ்நாட்டுப் பெண்களின் பயணச் செலவை மிச்சப்படுத்தி, மாதந்தோறும் சராசரியாக 1000 ரூபாய் அளவுக்கு சேமிப்பினை உயர்த்தியிருப்பதுடன், வேலைக்கான நேர்காணல்-சந்தைக்குச் சென்று பொருட்களை விற்றல் உள்ளிட்ட வேலைவாய்ப்புகளைத் தன்னம்பிக்கையுடன் தொடங்குவதற்கும் உந்துசக்தியாகத் திகழ்கிறது. பாலின சமத்துவம் போற்றும் திராவிட மாடல் அரசின் விடியல் பயணத் திட்டத்தை வழங்கிய முதலமைச்சருக்கு இந்த மாநாடு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கலைஞர் வழியில் இளைஞரணி பயணம்

”நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞரின் இலட்சிய வழி நடப்போம்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதில், “நவீனத் தமிழ்நாட்டின் சிற்பியாம் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை ஆண்டு முழுவதும் கொண்டாடும் வகையில், பல்வேறு குழுக்களை அமைத்து, பன்முக ஆற்றல் கொண்ட தலைவர் கலைஞரின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் விழாக்களை நடத்தி வருவதுடன், சென்னை, கிண்டியில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை, திருவாரூரில் கலைஞர் கோட்டம், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், சென்னை கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், மதுரை அலங்காநல்லூரில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என தமிழ்நாடெங்கும் முத்தமிழறிஞர் கலைஞரின் புகழ் போற்றும் நிலையான அமைப்புகளை உருவாக்கித் தந்துள்ள மாண்புமிகு முதலமைச்சர்-கழகத் தலைவர் அவர்களுக்கு இந்த மாநாடு தனது நன்றியினை உரித்தாக்கி, முத்தமிழறிஞர் ஊட்டிய மொழி-இன உணர்வுடன் இளைஞர் அணி தன் பயணத்தைத் தொடரும் என்ற உறுதியினை வழங்குகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழர்களை ஊக்குவிக்கும் பயிற்சிகள்

“இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாட்டை மாற்றிவரும் அமைச்சர்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதில், “செஸ் ஒலிம்பியாட் முதல், கேலோ இந்தியா வரை தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக்கும் வகையில் பன்னாட்டுத் தரத்துடன் பல போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி வருவதுடன், தமிழ்நாட்டு இளைஞர்கள்-இளம்பெண்கள் ஆகியோரின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில், மாவட்டங்கள் தோறும் விளையாட்டரங்குகள், போட்டிகள் ஆகியவற்றை முதலமைச்சரின் வழிகாட்டுதலில் சிறப்பாக மேற்கொண்டு வரும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்-கழக இளைஞர் அணிச் செயலாளரின் அயராத முயற்சிகளை இம்மாநாடு பாராட்டுவதுடன், உலகளாவிய போட்டிகளில் பதக்கம் வெல்லக்கூடிய வகையில், தமிழர்களை ஊக்குவிக்கும் பயிற்சிகளை கழக இளைஞர் அணி முன்னெடுக்கும் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நீட் ஒழிப்பில் இறுதி வெற்றியை பெற்றே தீருவோம் 

”உயிர்பலி நீட் நுழைவுத் தேர்வை ஒழிக்கும் வரை போராட்டம் ஓயாது” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதில், “தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்துத் தங்கை அரியலூர் அனிதா முதல் சென்னை ஜெகதீஸ்வரன் வரை 22 உயிர்களைப் பறித்துள்ள நீட் தேர்வு, ராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பல மாணவர்களின் உயிர்களைப் பறித்து வருவதுடன், ஒன்றிய பா.ஜ.க அரசின் ஆதரவு பெற்ற பயிற்சி நிறுவனங்கள், ஒவ்வொரு மாணவரிடமும் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலித்து கொள்ளை லாபம் அடைவதற்கு மட்டுமே துணை போகிறது. நீட் ஒழிக்கப்படும்வரை ஜனநாயக முறையிலான போராட்டங்களையும், சட்ட வழியிலான போராட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுத்து, மாணவர்களின் எதிர்காலத்தைப் பலி கொடுக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் கொடூர மனப்பான்மையை இந்திய அளவில் அம்பலப்படுத்தி, நீட் தேர்வு ஒழிப்பில் இறுதி வெற்றியை முழுமையாகப் பெற்றே தீரும் என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு

”குலக்கல்வி முறையைப் புகுத்தும் தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்துப் போராட்டம்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதில், “தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரால் தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்பைச் சிதைப்பது, இந்தி-சமஸ்கிருத மொழிகளைத் திணிப்பது, தொழிற்கல்வி என்ற பெயரிலும் விஸ்வகர்ம யோஜனா என்ற பெயரில் குலக்கல்வி முறையைக் கொண்டு வருவதும் சமூக நீதிக்கு முற்றிலும் எதிரானது என்பதால், தேசிய கல்விக் கொள்கையைக் கழக இளைஞர் அணி முழுமையாக எதிர்ப்பதுடன், தமிழ்நாட்டில் மட்டுமின்றிப் பிற மாநிலங்களிலும் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் போக்கை எதிர்த்து மாணவர்-இளைஞர் அமைப்புகளுடன் இணைந்து நாடு தழுவிய அளவிலான போராட்டங்களை இளைஞர் அணி முன்னெடுக்கும் என இந்த மாநாடு தீர்மானிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநில பட்டியலில் மருத்துவ கல்வி

“மாநிலப் பட்டியலுக்குக் கல்வி-மருத்துவத்தை மாற்றுக” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதில், “நீட் தேர்வு, முதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய இடங்களுக்கான இடஒதுக்கீடு, தேசிய கல்விக் கொள்கை வாயிலாக இந்தி ஆதிக்கம் என பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்திலும் ஒன்றிய அரசின் ஆதிக்கம் நீடிப்பது என்பது அந்தந்த மாநிலத்தின் மொழி- பண்பாடு-திறன் மேம்பாடு ஆகியவற்றைச் சிதைக்கும் நோக்கத்தில் இருப்பதாலும், இது ஜனநாயக நெறிமுறைகளுக்கு நேரெதிரானது என்பதாலும், பொதுப்பட்டியலில் உள்ள கல்வியையும் மருத்துவத்தையும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, அதற்கான சட்ட வழிமுறைகளை இளைஞர் அணி முன்னெடுக்கும் என இம்மாநாடு தீர்மானிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் செயல்படுவார்

”முதலமைச்சரே பல்கலைக்கழக வேந்தர்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதில், “தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் உயர்கல்வியிலும் ஆராய்ச்சிக் கல்வியிலும் தனித்துவத்துடன் திகழ்ந்து வரும் நிலையில், பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பு ஒன்றிய பா.ஜ.க. அரசினால் நியமிக்கப்படும் ஆளுநர்களின் தன்னிச்சையான போக்கினால் பெரும் பாதிப்புக்குள்ளாவதுடன், ஊழல் புகார்களும் காவிமயமாக்கும் தன்மையும் அதிகரித்து வருகின்றன. கல்வியில் மதவாதம்-வெறுப்புணர்வு, நிர்வாகத்தில் ஜனநாயக விரோதம்-ஊழல் ஆகியவைத் தொடர்ந்து கொண்டிருப்பதால், தமிழ்நாட்டின் செம்மையான உயர்கல்வி-ஆராய்ச்சிக் கல்வி நீடித்திட, பல்கலைக்கழக வேந்தர் எனும் உயர் பொறுப்புக்கு, நியமனப் பதவியில் உள்ள ஆளுநருக்குப் பதிலாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதலமைச்சரே தகுதியானவர் என்பதால், பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் செயல்படுவார் என்கிற தமிழ்நாடு அரசின் சட்ட முன்வடிவை இளைஞர் அணி ஆதரிப்பதுடன், அதனை விரைந்து நிறைவேற்றிட, இந்த மாநாடு வலியுறுத்துகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பில் மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை 

”தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு வேலைகளில் தமிழர்களை நியமித்திடு” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

”இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள்-ஒன்றிய அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையை, முற்றிலுமாக மாற்றிய 10 ஆண்டுகால ஒன்றிய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டில் அமைந்துள்ள தென்னக ரயில்வே, என்.எல்.சி, பி.ஹெச்.இ.எல்., ஆவடி கன ரக வாகனத் தொழிற்சாலை, ராணுவ ஆடைத் தயாரிப்பு நிறுவனம், ரயில் பெட்டித் தொழிற்சாலை மற்றும் தமிழ்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தேசிய வங்கிகளான இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டு, பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களைத் திட்டமிட்டுத் திணிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருவதன் மூலம், தமிழ்நாட்டு இளைஞர்களை வஞ்சிப்பதுடன், பிற மாநிலத்தவருடன் பகையுணர்வை வளர்க்கும் போக்கையும் மேற்கொண்டு வருவதை வன்மையாகக் கண்டிப்பதுடன், தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு சார்ந்த நிறுவனங்கள், அலுவலகங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியான ஆண்-பெண் விண்ணப்பதாரர்களுக்கே முன்னுரிமை அளித்துப் பணியிடங்களில் நியமித்திட வேண்டும் என்றும், ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என இந்த மாநாடு தீர்மானிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநிலத் தகுதி

”மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதில், “இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு ஆட்சிக் காலத்தில் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. பின்னர் பொறுப்புக்கு வந்த பிரதமர்களின் ஆட்சிக்காலங்களில் யூனியன் பிரதேசங்கள் பலவும் மாநிலங்களாகத் தகுதிபெற்றன. பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் ஜார்கண்ட், உத்தரகாண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் உருவாகின. பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் தெலங்கானா மாநிலம் உருவானது. ஒவ்வொரு ஆட்சியிலும் மாநில அந்தஸ்து என்பது மதிப்பு வாய்ந்ததாக இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில், இந்திய வரைபடத்தின் தலைப்பகுதியில் உள்ள மாநிலமான ஜம்மு-காஷ்மீர் தனக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புரிமைகளை இழந்ததுடன் மாநிலம் என்ற தகுதியையும் இழந்து, இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிளக்கப்பட்டிருக்கிறது.

மாநிலத் தகுதியை ஒரு நிலப்பகுதி இழக்கும்போது, அது ஆளுநர் அல்லது துணை நிலை ஆளுநர் எனும் ஒன்றிய அரசின் நிர்வாகப் பொறுப்பின் அதிகாரத்திற்கு ஆட்படுவதும், யூனியன் பிரதேசங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்தால்கூட ஆளுநர்கள் அதனை ஆட்டிப்படைப்பதையும் அருகிலுள்ள புதுச்சேரி உள்படப் பல யூனியன் பிரதேசங்களில் பார்க்கிறோம். எனவே, ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநிலத் தகுதி வழங்கப்பட வேண்டும் என்றும், மாநிலங்களை நகராட்சிகளைப் போல நடத்த நினைக்கும் ஒன்றிய பா.ஜக. அரசின் வல்லாதிக்கப் போக்கைக் கண்டித்தும் இந்த மாநில உரிமை முழக்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கிடுக

”கலைஞரின் மாநில சுயாட்சித் தீர்மானத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கிடுக” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதில், “மாநிலங்களின் ஒன்றியமாகத் திகழும் இந்தியா, உண்மையான கூட்டாட்சித் தத்துவத்தை நோக்கி முன்னேற வேண்டுமென்றால், மாநில அரசுகள் வலிமை கொண்டவையாகத் திகழ வேண்டும் என்ற நோக்கத்துடன் 1969-ஆம் ஆண்டு முதன் முதலாக முதலமைச்சரான முத்தமிழறிஞர் கலைஞர் நீதியரசர் ராஜமன்னார் தலைமையிலான குழுவை அமைத்து, அதன் பரிந்துரைகளைப் பெற்று, ஆலோசனைகள் மேற்கொண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் 1974-ஆம் ஆண்டில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றினார். அதனைத் தொடர்ந்து இந்தியாவின் பல மாநிலங்களிலும் மாநில சுயாட்சிக்கான குரல் ஒலித்து வருகிறது. கூட்டாட்சி அடிப்படையிலான இந்திய ஒன்றிய அரசு, சுயாட்சிமிக்க மாநில அரசுகள் என்பதே ஜனநாயகத்தை வலிமைப்படுத்தும். அதிகாரக் குவிப்பைத் தகர்த்து, அதிகார பரவலாக்கத்தை முன்னெடுக்கும் வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றிய மாநில சுயாட்சி தீர்மானத்தின் அடிப்படையில், தற்போதைய தேவைகளையும் இணைத்து, மாநில அரசுகளின் அதிகாரத்தை வலிமைப்படுத்திட வேண்டும் என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு கண்டனம் 

”அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளைக் கைப்பாவையாக்கிய ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதில், “ஜனநாயக நாட்டில் மக்களின் கடைசி நம்பிக்கை சட்டமும் நீதியும்தான். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அடையாளத்துக்காக ஒரு செங்கோலை வைத்துவிட்டு, சட்டம் நீதியின் ஆட்சி எனும் உண்மையான செங்கோலை, வில்லாக வளைத்து, அதில் தனது கைப்பாவையாக மாற்றி வைத்துள்ள அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை, வருமானவரித்துறை போன்ற அம்புகளைத் தொடுத்து, பா.ஜ.க. அல்லாத ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் உள்ள ஆளுங்கட்சியினர் மீதும், பா.ஜ.க.வை எதிர்க்கின்ற கட்சிகள் மீதும் வன்மத்துடன் பாய்ச்சுகின்ற ஒன்றிய பா.ஜ.க. அரசின் பழிவாங்கும் அரசியல் போக்கிற்கும், ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளானவர் பா.ஜ.க.வுக்கு ஆதரவான நிலை எடுத்தால், அவர் மீதான வழக்குகளில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ‘தூய்மைப் பட்டம்’ அளிக்கும் ‘வாஷிங் மெஷின் பா.ஜ.க.’ அரசின் இரட்டை வேட செயல்பாடுகளுக்கும் இந்த மாநாடு வன்மையானக் கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வாதிகாரத்தை ஒழித்திடுவோம்

“நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் சர்வாதிகாரத்தை ஒழித்திடுவோம்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதில், “ஒன்றிய ஆளுங்கட்சியின் எதேச்சதிகார செயல்பாடுகளை ஜனநாயகத்தின் உயர்ந்த இடமான நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்ட காரணத்தால், இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு, ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை நோக்கி ஒரே கூட்டத் தொடரில் 146 மக்களவை-மாநிலங்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்துள்ள பா.ஜ.க. அரசின் சர்வாதிகாரப் போக்கைக் கண்டிப்பதுடன், 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் இத்தகைய சர்வாதிகார சக்திகளை முழுமையாக வீழ்த்திட, இந்த மாநாடு உறுதியேற்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

”ராம ஜென்ம பூமிக்கு செல்வதில் மகிழ்ச்சி” அயோத்தி புறப்பட்டார் ரஜினிகாந்த்

ஆளுநர் பதவியை அகற்று… இந்துக்களுக்கு எதிரி பாஜக: திமுக இளைஞரணி மாநாட்டின் தீர்மானங்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share