மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து திமுக மகளிரணி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரில் கலவரம் வெடித்த நிலையில் அடுத்த நாளான மே 4 ஆம் தேதியே 2 பெண்களை சில ஆண்கள் நிர்வாணமாக சாலையில் இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனங்களை தெரிவித்தன.
இந்நிலையில் மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து வரும் ஜூலை 23 ஆம் தேதி எம்.பி. கனிமொழி தலைமையில் திமுக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இது குறித்து திமுக தலைமை கழகம் இன்று (ஜூலை 21) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”பா.ஜ.க. ஆட்சி நடத்தும் மணிப்பூர் மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகின. மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறிய நிலையில், சமீபத்தில் பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு வீதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட, மனிதாபிமானமற்ற கொடுமை நிகழ்ந்ததாக, ஊடகச் செய்திகள் தற்போது வெளிவந்துள்ளது.
அனைவரின் உள்ளத்தையும் பதற வைத்துள்ளது. தாய்மையை அவமானப்படுத்தும் இந்நிகழ்வுகளை மணிப்பூர் மாநில பா.ஜ.க. அரசு தடுக்கத் தவறி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
இக்கலவரங்கள் நிகழ்ந்த நேரத்தில் அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு வந்தார். மத்திய பா.ஜ.க. அரசும் மகளிருக்கு எதிரான இக்கொடுமைகளைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியது.
மணிப்பூர் கலவரம் தொடங்கிய நேரத்திலேயே தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது கண்டனத்தையும், கவலையையும் சமூக ஊடக வாயிலாக வெளிப்படுத்தினார்.
இச்சூழ்நிலையில் பெண்களுக்கு எதிரான நெஞ்சைப் பதற வைக்கும் இக்கொடுமையைக் கண்டித்து, வரும் ஜூலை 23 அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாலை 4 மணியளவில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, எம்.பி. தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தொடர்ச்சியாக ஜூலை 24 காலை 10.00 மணியளவில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். மாவட்டக் கழகச் செயலாளர்கள், மகளிர் அணி அமைப்பாளர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டங்களை சிறப்பாக நடத்திடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மோனிஷா
செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி : நீதிபதிகள் கேள்வி!
காவிரி நீர்… மத்திய அமைச்சரை சந்தித்தும் பலனில்லை: துரைமுருகன்