100 நாள் வேலை உறுதி திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி நிதியை வழங்காமல் வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து அனைத்து ஒன்றியங்களிலும் வரும் 29ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. dmk will protest aginst union govt on 100 day work
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (மார்ச் 26) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கடந்த 9ஆம் தேதி காலை, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் “தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
அப்போது மு.க.ஸ்டாலின் , தமிழ்நாடு மாநில நலன் குறித்து கேள்விகள் எழுப்பி, அதற்குரிய பதிலை ஒன்றிய அரசிடம் பெற வேண்டும் என்றும், அத்துடன் ‘ஒன்றிய அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட (MGNREGA) நிதியை வழங்காதது’ குறித்து கேள்வி எழுப்பிட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
அவரது அறிவுரைக்கிணங்க, “ஒன்றிய அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட(MGNREGA) நிதியை வழங்காதது குறித்து நேற்று (மார்ச் 25) அன்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய போது, அதற்கு எவ்வித பதிலையும் தராமலும் – தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட (MGNREGA) நிதியை வழங்காமலும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் வரும் 29.3.2025 சனிக்கிழமை அன்று காலை அனைத்து கழக ஒன்றியங்களிலும் தலா இரண்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பயன்பெறுவோரைத் திரட்டி “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.
இதில் மாவட்ட திமுக நிர்வாகிகள் – திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில், திமுக முன்னணியினர் முன்னிலையில் நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை திமுக செயலாளர்கள் – நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்ற வகையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்து, தமிழ்நாடு அரசை வஞ்சிக்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசுக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தத்தமது மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்த விவரத்தை தலைமைக் கழகத்திற்கு உடனே தெரிவித்திட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்” என துரைமுருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.