குஷ்பு குறித்து இழிவாக பேசியதற்காக கட்சியில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நிரந்தமாக நீக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (ஜூன் 18) அறிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று இரவு நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திமுக கழக பேச்சாளர்களில் ஒருவரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசினார்.
அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பாஜக நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு ஆகியோரை தரக்குறைவாக ஒருமையில் பேசினார்.
அவரது பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, தன்னை அசிங்கமாக பேசிய திமுக பேச்சாளர் மீது தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்காத திமுக தலைமையையும் கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கட்சியில் இருந்து நிரந்தமாக நீக்குவதாக திமுக பொது செயலாளர் துரைமுருகன் தற்போது அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கழகக் கட்டுப்பாட்டைமீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும்செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி (Dismiss) வைக்கப்படுகிறார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சை பேச்சுக்கு பெயர் போன சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கடந்த ஜனவரி மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து மேடையில் தகாத வார்த்தைகளால் பேசியதற்காக கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
