பெரியார் – மணியம்மை குறித்து பேச்சு: துரைமுருகன் வருத்தம்!

Published On:

| By christopher

dmk secretary duraimurugian asking apologies for his speech

தந்தை பெரியார்- மணியம்மை குறித்து பேசியதற்காக திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் இன்று (செப்டம்பர் 22) வருத்தம் தெரிவித்துள்ளார்.

வேலூரில் கடந்த 17ஆம் தேதி திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன், ”வேலூருக்கு அப்போது வந்த பெரியார் மணியம்மையை பார்த்த பின்னர் அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார். ஆனால் அண்ணா, ’இது பொருந்தா திருமணம்’ என்று அறிக்கை விட்டு திராவிட கழகத்தில் இருந்து வெளியேறினார்.

இதனால் தான் திமுக உருவானது. ஆக வேலூருக்கு வந்த பெரியார் மணியம்மையை திருமணம் செய்யாவிட்டால் திமுக வந்திருக்காது என தெரிவித்திருந்தார்.

அமைச்சர் துரைமுருகனின் இந்த பேச்சு, திராவிடர் கழகத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிலர் சமூக வலைதளங்களிலும் விமர்சனம் செய்து வந்தனர்.

இந்நிலையில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தனது பேச்சுக்கு இன்று வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “வேலூர் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் – மணியம்மை திருமணம் குறித்து பேசும் போது பயன்படுத்திய வார்த்தைகள் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் பெரியார் பற்றாளர்களுக்கு வருத்தம் தந்திருப்பதாக அறிகிறேன்.

நான் பயன்படுத்திய தேவையற்ற வார்த்தைகள் வருத்தத்தை தந்திருந்தால் அதற்காக வருந்துகிறேன்.

தந்தை பெரியாரிடத்தில் நான் எவ்வளவு கொள்கை பிடிப்பு கொண்டுள்ளேன் என்பது தி.க.தலைவர் வீரமணி நன்கு அறிவார்”  என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் ஹீரோ யார்?

எடப்பாடி பக்கத்தில் பன்னீரா? சபாநாயகரிடம் மீண்டும் முறையிட்ட அதிமுக

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share