திமுகவின் உட்கட்சித் தேர்தல்களில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாவட்டம் கோவை. இந்த மாவட்டத்துக்கு யார் மாவட்டச் செயலாளர்களாக வரப் போகிறார்கள் என்று கோவையில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுதுமே எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள் திமுகவினர். ஏனென்றால் இது அமைச்சர் செந்தில்பாலாஜி பொறுப்பு அமைச்சராக இருக்கக் கூடிய மாவட்டம்.
ஸ்டாலின் திமுகவுக்கு தலைவராகிவிட்டாலும் இன்னமும் அவரை தளபதி என்று பழைய பாசத்தோடு அழைக்கிறார்கள் திமுகவினர். அந்த வகையில் செந்தில்பாலாஜியை தளபதியின் தளபதி என்றே அவருக்கு நெருக்கமானவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஸ்டாலினும் கோவை மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சரான செந்தில்பாலாஜியிடம் கோவை திமுக பற்றி முடிவெடுக்க அவ்வளவு சுதந்திரத்தை அளித்திருக்கிறார்.

அதுதான் கோவை திமுக மாவட்ட செயலாளர் தேர்தலிலும் எதிரொலித்திருக்கிறது. கோவையின் மாவட்டச் செயலாளர் தேர்தலுக்குள் செல்வதற்கு முன் சில நாட்கள் முன்பு வரை இருந்த கோவை மாவட்ட அமைப்பு பற்றியும் கடந்த 18 ஆம் தேதி திமுக பொதுச் செயலாளர் அறிவித்த மாற்றியமைக்கப்பட்ட மாவட்ட அமைப்புகள் பற்றியும் தெரிந்துகொண்டு விடுவோம்.
பழைய நிலைமை!
செப்டம்பர் 18 ஆம் தேதிக்கு முன்புவரை கோவை திமுக 5 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இரு சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.
கோவை மாநகர் கிழக்கு: டி. கார்த்திக் மாவட்டச் செயலாளராக இருந்த இம்மாவட்டத்தில் கோவை தெற்கு, சிங்காநல்லூர் தொகுதிகள் இடம்பெற்றிருந்தன.
கோவை மாநகர் மேற்கு: பையா கிருஷ்ணன் மாவட்டப் பொறுப்பாளராக இருந்த இந்த மாவட்டத்தில் கோவை வடக்கு, கவுண்டம்பாளையம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றிருந்தன.
கோவை வடக்கு: சி.ஆர். ராமச்சந்திரன் மாவட்டப் பொறுப்பாளராக இருந்த இம்மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் தொகுதிகள் இடம்பெற்றிருந்தன.
கோவை தெற்கு: டாக்டர் வரதராஜன் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட இந்த மாவட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய தொகுதிகள் இடம்பெற்றிருந்தன.
கோவை கிழக்கு: மருதமலை சேனாதிபதி மாவட்டப் பொறுப்பாளராக இருந்த இந்த மாவட்டத்தில் கிணத்துக் கடவு, சூலூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.
புதிய வரையறை
கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜியின் பரிந்துரைப்படி திமுக பொதுச் செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில் இந்த ஐந்து மாவட்டங்கள் என்ற வரையறை மாற்றப்பட்டு, மூன்று மாவட்ட அமைப்புகளானது.

அதன்படி கோவை மாநகர், கோவை தெற்கு, கோவை வடக்கு என மூன்று மாவட்டங்களாக ஆக்கப்பட்டுள்ளன. பத்து தொகுதிகளும், கூடுதலாக அவினாசி தொகுதியில் குறிப்பிட்ட பகுதியும் இந்த மூன்று மாவட்டங்களுக்குள் பரிமாற்றம் செய்யப்பட்டன.
அதாவது கோவை மாநகர் மாவட்டத்தில் கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்கா நல்லூர் ஆகிய மூன்று தொகுதிகள் கொண்டுவரப்பட்டன.
கோவை தெற்கு மாவட்டம் என உருவாக்கப்பட்டு அதில் பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக் கடவு, சூலூர் ஆகிய நான்கு தொகுதிகள் வைக்கப்பட்டுள்ளன.
கோவை வடக்கு மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், அவினாசி (அன்னூர் ஒன்றியம் மட்டும்) ஆகிய நான்கு தொகுதிகள் என மூன்று மாவட்டங்களாக மறு வரையறை செய்யப்பட்டன.
இதற்கிடையில் கடந்த ஆகஸ்டு 23 ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து நான்கு நாள் பயணமாக கோவைக்குப் புறப்பட்டார். அன்று மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணை பகுதியில், ‘செந்தில்பாலாஜிக்கு எதிராக மாவட்டப் பொறுப்பாளர்கள்: ஸ்டாலின் கோவை விசிட் ஹாட்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அந்த செய்தியில், “மொத்தம் பத்து தொகுதிகளை மூன்று மாவட்டங்களாக மாற்றுவதுதான் செந்தில்பாலாஜியின் திட்டம். அதேநேரம் இப்போது இருக்கும் மாவட்டப் பொறுப்பாளர்களையே பொறுப்பில் வைத்திருந்தால் எம்பி தேர்தலை எதிர்கொள்வது கடினமாக இருக்கும் என்று கருதுகிறார் செந்தில்பாலாஜி. மேலும் தொண்டாமுத்தூர் ரவி, சூலுர் தளபதி முருகேசன் ஆகியோரை மாவட்டச் செயலாளராக தேர்ந்தெடுக்க வைக்க திட்டமிட்டு இதுபற்றி ஸ்டாலினிடமும் தெரியப்படுத்திவிட்டார் செந்தில்பாலாஜி” என்று குறிப்பிட்டிருந்தோம்.

மேலும் கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்திக் மட்டுமே செந்தில்பாலாஜியுடன் ஓரளவு இணக்கமாக பழகி வருகிறார்.மற்ற அனைத்து பொறுப்பாளர்களும் செந்தில்பாலாஜியை கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தோம்.
அதன்படியே நேற்று (செப்டம்பர் 23) கோவை மாவட்டத்துக்கான வேட்பு மனு தாக்கலில் இப்போதைய மாவட்டப் பொறுப்பாளர் கார்த்திக் தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
கோவை மாநகர் மாவட்டத்துக்கு கார்த்திக்கும், கோவை தெற்கு மாவட்டத்துக்கு தளபதி முருகேசனும், கோவை வடக்கு மாவட்டத்துக்கு தொ.அ.ரவியும் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். இவர்களை கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவிப்பதற்கு முன்பே செந்தில்பாலாஜி அறிவித்துவிட்டார். எங்கே எப்போது?
(தொடரும்)
-வேந்தன்
மாசெ ஆகிறார் முன்னாள் அமைச்சர் பழனியப்பன்: வலுவாகும் செந்தில்பாலாஜி கூடாரம்!
மீண்டும் 97, 98 வந்துவிடக் கூடாது: கோவையில் கவனம் குவிக்கும் போலீஸ்!