dmk mp trichy siva anger
தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக பிரதமரால் பரிந்துரைக்கப்பட்ட மத்திய அமைச்சரை கொண்டு வருவதற்கான சட்ட திருத்த மசோதா இன்று (டிசம்பர் 12) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் வழக்கமாக தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல்ஆணையர்கள் மத்திய அமைச்சரவையின் பரிந்துரை அடிப்படையில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவர்.
இதனால் தேர்தல் ஆணையம் என்பது மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
மேலும் தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் சீர்திருத்தம் கொண்டுவர வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை கடந்த மார்ச் மாதம் விசாரித்த நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு,
”மத்திய அரசு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வது தொடர்பாக ஒரு சட்டம் இயற்ற வேண்டும்.
அதுவரை, 1) பிரதமர், 2) மக்களவை எதிர்க்கட்சி தலைவர், 3) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிய 3 பேர் அடங்கிய குழுதான் தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் தான், தற்போது தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் புதிய சட்டத்திருத்த மசோதாவை சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.
அதன்படி, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர் நியமன பரிந்துரை குழுவில்,
பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், ஆகியோருடன் தலைமை நீதிபதிக்கு பதில் மூன்றவதாக பிரதமரால் பரிந்துரைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் உள்ள அமைச்சர் இடம்பெறும்வார் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த மசோதாவில், “தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதியின் சம்பளத்திற்கு சமமான சம்பளம் வழங்கப்படும்” என்றும் கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இந்த புதிய சட்ட திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா, “தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனத்தில் மாற்றம் செய்ய அதிகாரம் அளிக்கும் மசோதா மத்திய பாஜக அரசின் விருப்பத்திற்கு ஏற்ப கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த மசோதா உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குட்பட்டு கட்டமைக்கப்படவில்லை. தேர்தல் ஆணையர் நியமன சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு போலீஸ் கஸ்டடி!
ரஜினி : அரசியலைத் துறந்த எதிர்நாயகன்!
dmk mp trichy siva anger
