அமைச்சர் செந்தில் பாலாஜி டெல்லியில் உள்ள திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது நெஞ்சு வலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்தில் அடைப்பு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்தார். அவரை ஜூலை 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் உடல்நலம் தேறி வந்த செந்தில் பாலாஜி இன்று (ஜூலை 17) காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மாலை 4.50 மணிக்கு புழல் சிறைக்கு அழைத்து சென்றனர்.
முன்னதாக, கடந்த ஜூலை 4ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி, ‘இன்றில் இருந்து 10 நாட்கள் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். 10 நாட்களுக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டால் சிறைத் துறை மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம்’ என்று உத்தரவிட்டார். நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்புடன் தான் உடன் படுவதாக மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் திகார் சிறைக்கு கொண்டு செல்ல வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
செந்தில் பாலாஜியை டெல்லி திகார் சிறைக்கு மாற்றம் செய்து, அங்கு வைத்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய தயாராகி வருவதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரியா