அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சேலத்தில் இருந்து இன்று (ஆகஸ்ட் 9) சென்னைக்கு செல்லும் அ.தி.மு.கவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க, தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் என எல்லோரும் பெரும் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என அ.தி.மு.க. கிழக்கு மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏவுமான அசோக்குமார் மற்றும் மேற்கு மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி ஆகியோர் ஆகஸ்ட் 7ம் தேதியே இணைந்து அறிக்கைவிட்டதுடன், அதற்கான களப் பணியும் ஆற்றினர்.
இதையடுத்து, இன்று சென்னை புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி வழியாகச் சென்றார். அப்போது கிருஷ்ணகிரி, அவதானப்பட்டி சிறுவர் பூங்கா அருகே அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர், தொண்டர்கள் வெள்ளத்தில் மிதந்துவந்தார். அந்தளவுக்கு மக்கள் கூட்டத்தை அப்பகுதி மாவட்டச் செயலாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
பின்னர் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவில்தான் சாதாரண தொண்டன்கூட பொதுச்செயலாளர் பதவிக்கு வர முடியும். திமுகவில் வாரிசு அரசியல் நடந்து வருகிறது. அங்கு, குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே பதவிக்கு வருவார்கள். திமுகவின் 14 மாத ஆட்சிக் காலத்தில், எல்லா துறைகளிலும் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்துள்ளனர். இந்த ஆட்சியால் எந்த நன்மையும் இல்லை. திமுகவினருக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை.

குடும்ப ஆட்சியால் தப்பித்தோம் பிழைத்தோம் என இலங்கையில் அதிபரே ஊரைவிட்டு ஓடிவிட்டார். மக்கள் விரோத ஆட்சி நடத்தும் தமிழக முதல்வர் இதை எண்ணிப் பார்க்க வேண்டும். அதிமுகவை எந்த அவதாரம் எடுத்தாலும் ஸ்டாலினால் அழிக்க முடியாது. அதிமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது.
எம்ஜிஆர், ஜெயலலிதா பல்வேறு இன்னல்கள், துன்பங்களை சந்தித்து, அத்தனையும் தூள்தூளாக்கி கட்சி, ஆட்சியை வழிநடத்தினர். அதிமுகவில் சோதனையை உருவாக்கி வரும் விஷமிகள், கருப்பு ஆடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எதிரிகளுடன், துரோகிகள் கைகோத்து செய்த சதியின் காரணமாக திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது. துரோகம் செய்த சதியால் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. இனி வரக்கூடிய தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெறும்” என்றார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏவுமான முனுசாமியும் கலந்துகொண்டார்.
ஜெ.பிரகாஷ்
சிறப்புக் கட்டுரை : 2ஜி இழப்பு என்றால் 5ஜியில் நடந்தது என்ன?

Comments are closed.