வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டி… திமுக நிர்வாகி கொலை: பகீர் பின்னணி!

Published On:

| By Kavi

DMK executive aramudhan killed

சென்னையை அடுத்த, செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வேம்புலி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வி.எஸ்.ஆராமுதன். இவர், திமுக ஒன்றிய செயலாளர், ஒன்றிய குழு பெருந்தலைவராக பதவி வகித்து வந்தார்.

இவர் நேற்றிரவு (பிப்ரவரி 29)  வண்டலூர் பழைய பாலத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி செல்லும் வழியில் தனது காரை நிறுத்திவிட்டு அவருடன் வந்திருந்த 2 பேருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரவுடி கும்பல் ஆராமுதனின் கார் மீது நாட்டுவெடி குண்டை வீசி, அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது.

இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ஆராமுதனை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து அவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இன்று (மார்ச் 1) முதல்வருக்கு பிறந்தநாள் என்பதால் நேற்று இரவே  ஐஏஎஸ், ஐபிஎஸ் உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய மூத்த அமைச்சர்கள் ஆகியோர் அவரைச் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.

அந்த நேரத்தில் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராமுதன் கொலை செய்யப்பட்ட செய்தியை முதல்வரிடம், அவரது உதவியாளர் தினேஷ் தெரிவித்தார்.

இதை கேட்டு பதறிப்போன முதல்வர் ஸ்டாலின், டிஜிபி சங்கர் ஜிவாலை தொடர்புகொண்டு குற்றவாளி யார், கொலை செய்ததற்கு மோட்டிவ் என்ன என்று விசாரித்து, உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யுங்கள் என்று உத்தரவிட்டார்.

இதனிடையே கொலை சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், கூடுதல் ஆணையர் மகேஸ்வரி, துணை ஆணையர் கௌதம் கோயல் என போலீஸ் படை சைபர் க்ரைம் உதவியுடன் புலனாய்வு விசாரணையில் இறங்கியது.

DMK executive aramudhan killed

இந்த கொலை சம்பவம் குறித்து நாம் விசாரித்தபோது, “கொலை செய்யப்பட்ட ஆராமுதன் 20 வருடங்களுக்கு முன்பு வன்னியர் சங்கத்தில் தலைவராக இருந்தவர். அதன் பிறகு திமுகவில் இணைத்துக் கொண்டார்.

வண்டலூர் ஊராட்சி மன்றத் தலைவராக இரண்டு முறை இருந்தார். காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மற்றும் ஊராட்சி ஒன்றிய பெருங்குழு துணைத் தலைவர் ஆகிய பதவிகளை வகித்து வந்தார்.  இவர் அமைச்சர் தா.மோ அன்பரசனின் ஆதரவாளர்.

ஆராமுதனுக்கு தமிழகம் முழுவதும் நல்ல நண்பர்கள் உண்டு.  கட்சிக்காரர்களுக்கு நல்லது கெட்டது என்றால் தாராளமாக பண உதவி செய்பவர்.  இவர் மீது எந்தவிதமான குற்றவழக்குகளும் இல்லை.

DMK executive aramudhan killed

ரியல் எஸ்டேட் பிசினஸும் செய்து வந்தார். தொழிலிலும் கூட யாரிடமும் பகையை ஏற்படுத்திக்கொள்ளமாட்டார்” என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இப்படிப்பட்டவரை ஏன் கொலை செய்தனர் என்று கேட்டோம்.

“ரவுடிகளுக்கு ஆராமுதன் மாமூல் கொடுத்து வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அதிகமாக மாமூல் கேட்டதால் மாமூல் கொடுப்பதை நிறுத்தியுள்ளார். அதுதான் கொலைக்கு காரணம்.  கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ரவுடி செல்லா என்ற செல்வகுமார். இவர் மீது கொலை, கொலை முயற்சி என 15 வழக்குகள் உள்ளன. இன்னொருவர் கனகராஜ். இவர் மீது 12 வழக்குகள் உள்ளன. செல்லா புழல் சிறையில் இருக்கிறார். கனகராஜ் வெளியில் இருக்கிறார்.

சிறையில் உள்ள செல்லாவும், வெளியில் உள்ள கனகராஜூம்  மாமூல் வசூலைப் பற்றி ஒவ்வொரு மாதமும் வரவு செலவு கணக்குப் பார்ப்பார்கள். அதில் ஆராமுதன் கொடுத்து வந்த மாமூல் கட்டாகியிருந்ததை பல முறை கேட்டுப் பார்த்தார்கள். ஆராமுதன் ஒரு கட்டத்தில் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார்.

இதனால் கோபமான ரவுடி செல்லா, சிறையில் இருந்தபடியே ஆராமுதனை சில முறை மிரட்டியுள்ளார். அதை ஆராமுதன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

DMK executive aramudhan killed

ஆராமுதன் மாமூல் கொடுக்கவில்லை என்ற செய்தி, மாமூல் கொடுத்து வரும் மற்ற ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் தெரிந்துவிட்டால்…  பிறகு யாரும் மாமூல் கொடுக்க மாட்டார்கள். பயமும் போய்விடும். இதனால் ஆராமுதனை போட்டுத்தள்ள முடிவு செய்த செல்லா, வெளியில் உள்ள ரவுடிகளை வைத்து கொலை செய்துள்ளார்

ஆராமுதன் எந்த நேரமும் துப்பாக்கி கையில் வைத்திருப்பார். கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் துப்பாக்கி லைசென்ஸை ரினுவல் செய்தார். அதனால் அவர் துப்பாக்கி எடுக்காத அளவுக்கு முதலில் வெடிகுண்டு போட்டுவிட்டு, அதன்பிறகு போட்டுத்தள்ளுங்கள் என்று ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்திருக்கார் ரவுடி செல்லா” என்றும் போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, இந்த வழக்கில் ரவுடி செல்லாவின் ஆதரவாளர்கள் முனீஸ்வரன், சத்தியசீலன், சம்பத்குமார், 16 வயது சிறுவன் மற்றும்  17 வயது சிறுவன் ஆகிய ஐந்து பேர் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

விசாரணை அதிகாரிகள் விரைவில் சிறையில் உள்ள செல்லாவை கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்யவுள்ளனர்.

-வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

செம பிரமாண்டம், வெறும் 15௦ பேருக்கு மட்டுமே அழைப்பு… காதலரை கரம்பிடிக்கும் நடிகை மீரா சோப்ரா!

பொன்முடி தொகுதி என்ன ஆனது? அதிரடியில் இறங்கிய அதிமுக

பணிப்பெண்ணுக்கு கொடுமை : திமுக எம்.எல்.ஏ. மகன் மருமகளுக்கு ஜாமீன்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share