திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த டிசம்பர் 29ஆம் தேதி பல்லடத்தில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற பெயரில் திமுக மகளிர் மாநாடு நடைபெற்ற நிலையில், இன்று (ஜனவரி 29) டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் நடைபெற்று வருகிறது.
இதில் கலந்துகொள்ள திறந்த வெளி வேனில் முதல்வர் ஸ்டாலின் எண்ட்ரி கொடுத்தார். இரு பக்கமும் திரண்டிருந்த திமுக பெண் தொண்டர்களை பார்த்து கையசைத்துக்கொண்டே மேடைக்கு வந்தார்.
திமுக மகளிர் அணியினர் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் மாநாட்டில் பேசிய அமைச்சரும் திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேரு, “1996, 2006 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஆட்சி திமுக வரலாற்றிலேயே சிறப்பான ஆட்சி என்று எல்லோராலும் பாரட்டப்பட்டது. 2021ல் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அதை விட சிறந்த ஆட்சியை வழங்கி, தாயுமானவராக விளங்கிக் கொண்டிருக்கிறார். இந்தியாவில் இருக்கக்கூடிய முதலமைச்சர்களில் நம்பர் 1 முதலமைச்சர் என்று பெயர் பெற்றிருக்கிறார். இவர் ஆரம்பிக்கக் கூடிய திட்டங்களை மற்ற மாநிலங்கள் மட்டுமல்ல, உலக நாடுகளும் கொண்டு வந்து நிறைவேற்றுகின்றன. மீண்டும் 2026ல் அவர் ஆட்சியை தொடர்வார்” என்று பாராட்டினார்.
அனைவரையும் வரவேற்று பேசிய பின் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி ஆகியோருக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் சிலையையும், வெள்ளி வாள் ஒன்றையும் பரிசாக வழங்கினார் கே.என் நேரு.
அப்போது அந்த வாளை வாங்கி கனிமொழி கையில் வைத்திருந்த நிலையில் அருகிலிருந்த முதல்வர் ஸ்டாலின் கனிமொழியின் கையை தூக்கி பிடித்து அந்த வாளை உயர்த்திக் காட்டினார்.
இதைபார்த்த திமுக மகளிரணியினர் ஆரவாரம் செய்தனர்.
