திமுகவில் இருந்து சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் 144-வது வார்டு கவுன்சிலராக திமுகவைச் சேர்ந்த ஏ.ஸ்டாலின் உள்ளார். இவர் மீது லஞ்சம் கேட்டு மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி மதுரவாயல் வி.ஜி.பி, அமுதா நகரில் கூவம் கரையோரத்தில் சென்னை குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கடந்த 2019ம் ஆண்டு முதல் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கும் பணிகள் ரூ.56 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதனை தனியார் நிறுவன ஒப்பந்ததாரர் நாகராஜன் என்பவர் எடுத்து செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திமுக கவுன்சிலரான ஏ.ஸ்டாலின், தனது ஆதரவாளர்களுடன் சென்று, ‘அமுதா நகரில் எந்த பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது, தன்னை மீறி மேற்கொள்ள வேண்டுமென்றால் ரூ.10 லட்சம் லஞ்சம் தர வேண்டும்’ என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரிய செயற்பொறியாளர் மற்றும் தனியார் நிறுவன ஒப்பந்ததாரர் இருவரும் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட போலீசார், கவுன்சிலர் ஸ்டாலின் மீது, அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் மற்றும் பணம் கேட்டு மிரட்டுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் கவுன்சிலர் ஸ்டாலினை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று (அக்டோபர் 5) அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ”சென்னை தெற்கு மாவட்டம் மதுரவாயல் வடக்கு பகுதி 144வது வட்டச் செயலாளரும் சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினருமான ஏ.ஸ்டாலின் கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மெரினாவில் களைகட்டும் விமான சாகச நிகழ்ச்சி… சிலிர்ப்பூட்டும் விமானங்கள் : ஒரு பார்வை!
இன்னும் சில நாட்களில் தக்காளி விலை கிலோ ரூ.100-ஐ தாண்டும்… என்ன காரணம்?