ஆய்வு மட்டும் போதாது, நடவடிக்கை தேவை: விஜயகாந்த்

Published On:

| By Balaji

முதல்வர் மழை பாதிப்புகளை ஆய்வு நடத்தினால் மட்டும் போதாது, ஆக்கப்பூர்வமான நடவடிக்கை தேவை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

வடகிழக்கு பருவமழை காரணமாகச் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள்ளும், வெளிப்புறத்திலும் மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நகரத்தில் இவ்வாறு என்றால் கிராமப்புறங்களில், வயல்வெளி எங்கும் தண்ணீர் காடாகக் காட்சியளிக்கிறது.

ADVERTISEMENT

வெள்ளத்தில் பயிர்கள் மூழ்கி ஒரு பக்கம் சேதமடைந்தால் மறுபக்கம், ஆடு, மாடுகள் உணவின்றி தவிக்கின்றன. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிவாரண உதவிகளை எதிர்பார்த்தும் சீரமைப்பு பணிகளை விரைவில் செய்ய வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

குறிப்பாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெய்த மழையால் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்துள்ளன. சுரங்கப்பாதைகள் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாகப் போக்குவரத்தில் தினமும் மாற்றம் செய்கின்றனர் சென்னை போக்குவரத்து போலீசார். இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த சூழலில், சாலைகளை சீரமைக்கவும், மழை நீரைவெளியேற்றவும் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இன்று (டிசம்பர் 1) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது மழை சிறிது ஓய்ந்திருக்கும் நிலையில், குடியிருப்பு பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் மழைநீர் இன்னும் வடியாததால் சென்னை மாநகரம் தீவு போல் காட்சியளிக்கிறது. இதனால் காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

தேங்கியிருக்கும் மழை நீரால் பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாலைகள் மற்றும் தெருக்களில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் ஆறாக ஓடுவதால், அதில் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய் தொற்றுகளும் வேகமாகப் பரவி வருகிறது. மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தமிழக முதல்வர் ஆய்வு செய்தால் மட்டும் போதாது, மழை நீரை அகற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், “இனியும் காலம் தாழ்த்தாமல் சென்னையில் தேங்கியுள்ள மழை நீரை ராட்சத குழாய்கள் மூலம் அகற்றத் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், மழை நீரில் பயிர்களை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கும் தமிழக அரசு உரிய இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும்.

உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி போல மெயின் ரோட்டில் மெட்ரோ ரயிலுக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தாலும், தெருக்களில் மழை நீர் தேங்கி சாலைகள் சேதம் அடைந்துள்ளதாலும் சென்னை சாலையை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலைகளைச் சீரமைக்கவும், மழை நீரை வெளியேற்றவும் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share