kபிரச்சாரத்துக்கு தயாராகும் விஜயகாந்த்

Published On:

| By Balaji

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்த மருத்துவர்களிடம் ஆலோசனை செய்து சிகிச்சைக் கொடுத்து வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 2011இல் அதிமுக – தேமுதிக கூட்டணியில் 29 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவராக கம்பீரமாகச் சட்டமன்றத்தில்  குரல் கொடுத்த விஜயகாந்த், 2014இல் உடல்நிலை சரியில்லாமல் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து அவ்வப்போது தொடர்ந்து சென்னை மியாட் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்துவருகிறார்.

2016 சட்டமன்றத் தேர்தலில் உடல்நிலை முடியாத நிலையிலும் பிரச்சாரம் செய்தார் அதைத் தொடர்ந்து உடல்நலம் குறைவு ஏற்பட்டது, 2020இல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில், வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலுக்குப் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று விஜயகாந்த் சிகிச்சை பெற்று வருகிறார்

நேற்று (மார்ச் 3) மியாட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விஜயகாந்தை, பரிசோதனை செய்த மருத்துவர்கள், தினம்தோறும் பத்து அடி தூரம் தனியாக நடந்து பழகட்டும் அவரைத் தாங்கி பிடிக்கவேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள். தினம்தோறும் பிசியோதெரப்பி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் மக்களைச் சந்திக்க கேப்டன் வருவார் என்கிறார்கள் தேமுதிக நிர்வாகிகள். கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி கட்சியின் கொடி நாளை முன்னிட்டு, அலுவலகத்துக்குத் திறந்த வேனில் வந்த விஜயகாந்த், என் தொண்டர்களையும், என் மக்களையும் சந்திக்க விரைவில் வரப் போகிறேன்”என்று கையை உயர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

-வணங்காமுடி

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share