வங்க கடலில் உருவான டிட்வா (டித்வா திட்வா Ditwah) புயல் காரணமாக பேரழிவை சந்தித்துள்ள நிலையில், இலங்கையின் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அனுதாபங்களைத் தெரிவித்தார்.
டிட்வா புயலால் இலங்கையில் 390 பேர் பலியாகி உள்ளனர்; மேலும் 350 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை.
பெருந்துயரிலும் பேரழிவிலும் சிக்கி இருக்கும் இலங்கைக்கு முதல் நாடாக உதவிக் கரம் நீட்டியது மத்திய அரசு. ஆபரேசன் சாகர் பந்து நடவடிக்கை மூலமாக இலங்கைக்கான நிவாரணப் பொருட்களை கொண்டு சென்ற ராணுவம். அத்துடன் இலங்கையில் வெள்ள மீட்பு நிவாரணப் பணிகளிலும் இந்திய பேரிடர் மீட்பு குழுக்கள் ஈடுபட்டன.
இந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி தமது அனுதாபங்களைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தில், “ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் உரையாடியதுடன், டித்வா புயல் காரணமாக பரவலாக ஏற்பட்ட பேரழிவுக்காகவும் துயர்மிக்க உயிரிழப்புகளுக்காகவும் மனமார்ந்த அனுதாபங்களைத் தெரிவித்திருந்தேன். இந்த கடினமான நேரத்தில் மிகவும் நெருக்கமானதும் நம்பகமானதுமான நண்பனாக இந்தியா இலங்கையுடனும், அந்நாட்டு மக்களுடனும் உறுதுணையாக நிற்கின்றது.
தற்போது முன்னெடுக்கப்படும் சாகர்பந்து நடவடிக்கையின் கீழ் நிவாரண மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு தேவையான சகல அத்தியாவசிய உதவிகளையும் இந்தியா தொடர்ந்து வழங்கும் அதேவேளை, இலங்கை தனது புனர்வாழ்வு மற்றும் மீட்சி நடவடிக்கைகளை எதிர்காலத்தில் முன்னெடுக்கும் நிலையிலும் இந்தியா துணைநிற்கும்” என தெரிவித்துள்ளார்.
