2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் இன்று (பிப்ரவரி 18) தொடங்க உள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று (பிப்ரவரி 17) இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 20-ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
தமிழக இடைக்கால பட்ஜெட் குறித்த விவாதம் பேரவையில் இன்று தொடங்குகிறது. முதல் நாளான இன்று, முன்னாள் எம்எல்ஏக்களின் மறைவு குறித்த இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். அதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநில முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் மூத்த கல்வியாளர் ராஜகோபாலன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
அதைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட 2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் மற்றும் இடைக்கால வேளாண் பட்ஜெட் ஆகியவை குறித்து சட்டமன்ற உறுப்பினர்களின் பொது விவாதம் தொடங்குகிறது. நாளையும் (பிப்ரவரி 19) பொது விவாதம் தொடர்ந்து நடைபெறும்.
பின்னர், வரும் பிப்ரவரி 20-ஆம் தேதி, இரண்டு இடைக்கால பட்ஜெட்டுகளிலும் பொது விவாதத்திற்கு முறையே அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதில் அளித்துப் பேச உள்ளனர்.
இதைத் தொடர்ந்து, 2025-2026 மற்றும் 2026-2027 ஆம் ஆண்டுகளுக்கான முன்பண மானியக் கோரிக்கைகள் அவைக்கு அளிக்கப்பட உள்ளன. அவற்றுக்கான சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன.
