சாய் தன்ஷிகா நடிப்பில் ஐ.ராதிகா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் The Proof. இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், படத்தில் பணியாற்றிய அனைவரையும் மனமார பாராட்டியது மட்டுமின்றி வெற்றிமாறனின் வாடிவாசல் குறித்த ஒரு சூப்பர் தகவலை கூறி இருக்கிறார்.
அந்த விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது, “சமீபத்தில் இயக்குநர் வெற்றிமாறனை சந்தித்து பேசினேன். அப்போது வாடிவாசல் படம் குறித்து அவரிடம் கேட்ட போது வாடிவாசல் நாவலில் இருந்து திரைப்படமாக அவர் எடுக்க இருக்கும் அந்த பகுதியை மட்டும் என்னிடம் சொன்னார்.
இந்தியாவின் மிகப்பெரிய படைப்பாக வாடிவாசல் திரைப்படம் இருக்கும். சூப்பர் ஹிட் ஆகும். சூர்யா மிகச்சிறந்த நடிகர். இந்த படத்திற்குப் பிறகு சூர்யா ஒரு லெஜண்ட் ஆகி விடுவார். வெற்றிமாறன் அப்படியான ஒரு படத்தை எடுக்க உள்ளார்.
கடவுளுக்கு பிறகு அண்ணாந்து பார்க்கக்கூடிய விஷயம் சினிமா தான். கோவிலுக்கு போகாதீர்கள் சினிமாவுக்கு போங்க. கோவிலுக்கு சென்றால் பாவம் பண்ணிட்டேன் மன்னித்து விடுங்கள் என்று கூறுவோம். ஆனால், சினிமா உங்களை சிரிக்க வைக்கும்.
சினிமா எடுக்க வருபவர்கள் டிரெண்டை பற்றி கவலைப்பட வேண்டாம். ஆனால், அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் ஒரு ஆயிரம் பேர் படம் பார்ப்பதற்கு திரையரங்குகளுக்குள் வந்தால் அந்த ஆயிரம் பேரை விட அடுத்த இரண்டரை மணி நேரம் அந்த டைரக்டர் அறிவாளியாக இருக்க வேண்டும்.
சினிமாவிற்குள் வருபவர்கள் அனைவரும் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். சினிமா மட்டும் தான் படைத்தலுக்கு உரியது அதனால் தான் சினிமாவை கடவுள் என்று சொல்கிறார்கள்” என்று இயக்குநர் மிஷ்கின் அந்த நிகழ்ச்சியில் பேசி இருந்தார்.
வாடிவாசல் படத்திற்காக நடிகர் சூர்யா ஒரு காளை மாட்டை தனது வீட்டில் வைத்து வளர்த்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருக்கும் படத்தில் நடிகர் சூர்யா நடிக்க தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது. சுதா கொங்கரா – சூர்யா கூட்டணியில் உருவாக இருந்த புறநானூறு திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அந்த படம் குறித்த எந்த அப்டேட்களும் வெளியாகவில்லை.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு: மோடிக்கு சித்தராமையா கடிதம்!
“நடராஜனுக்கு டி20 உலககோப்பையில் இடமில்லையா?” – சரத்குமார் கேள்வி!