தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அதிமுகவின் மூத்த நிர்வாகி மற்றும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம்.
இந்நிலையில் இன்று (நவம்பர் 1) ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கொடநாடு கொலைகள் குறித்தும் பேசியிருந்தார்,
செங்கோட்டையன் திமுகவின் பி டீம் என்ற அதிமுக தலைமையின் விமர்சனத்துக்கு, “எடப்பாடி பழனிசாமி ஏ1” என்று கூறி புயலை கிளம்பியுள்ளார் செங்கோட்டையன்.
இதற்கு எடப்பாடி பழனிசாமி, எவ்வளவு வன்மம் இருந்திருந்தால் இப்படி பேசியிருப்பார் என்று செங்கோட்டையனுக்கு பதிலடி கொடுத்திருந்தார்.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசனிடம், கொடநாடு வழக்கில் ஏ1 எடப்பாடி தான் என்ற வகையில் செங்கோட்டையன் பேசியிருக்கிறார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர், ‘பிடிச்சி உள்ள போடுங்களே… சட்டப்படி செய்யுங்களேன்” என்று காட்டமாக பதிலளித்த திண்டுக்கல் சீனிவாசன், ‘அவர்தான் அக்யூஸ்ட் என்றால் போலீஸ் என்ன செய்கிறது… ஏ1ஆ இருக்கிறவரை ஜெயிலில் போட வேண்டியதுதான் திமுகதானே ஆட்சியில் இருக்கிறது. திராணி இருந்தால், சரியான சட்டங்கள் இருந்தால் செய்யுங்கள். திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்டதே” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர், “எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவது “தெய்வத்தின் தீர்ப்பு”. எடப்பாடி பழனிசாமியை விட வயதில் மூத்தவர் என்பதாலேயே ஒருவர் மூத்த நிர்வாகியாகி விட முடியுமா?. எடப்பாடி பழனிசாமிக்கு, செங்கோட்டையனை விட முன்னதாகப் பிறந்தது தவிர அனைத்து தகுதிகளும் இருக்கிறது. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே செங்கோட்டையன் முதலமைச்சராகும் கனவில் இருந்தார். அதுவே அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதற்குக் காரணம்.
தி.மு.க. வெற்றி பெறும் என்று கூறிய ஓ. பன்னீர்செல்வத்துடன் செங்கோட்டையன் சேர்ந்ததாலேயே அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார் . கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் ஒரு “பி டீம்” ஆக செயல்பட்டு வருகின்றனர். அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
