டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகிய இருவரும் சாதியை சொல்லி அரசியல் செய்கின்றனர் என்று திண்டுக்கல் சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் அதிமுக பொன்விழா மாநாடு நடைபெற உள்ளது. இதனையொட்டி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் தலைமை கழக நிர்வாகிகள் நேரில் சென்று கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்களை சந்தித்து கூட்டம் நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் கேடிசி நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுகவின் மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட செயலாளர் கணேஷ் ராஜா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் அமைச்சர்கள் கேபி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், “டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கப் போவதாக சொல்கின்றனர் அம்மாவிடம் கொள்ளையடித்த பணத்தை வைத்து தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என நினைக்கிறார்கள்.
சாதியை சொல்லி அவர்கள் அரசியல் செய்கிறார்கள். கடவுள் தீர்ப்பு எடப்பாடியார் பக்கம் உள்ளது. ஸ்டாலினை தவிர வேறு யாராலும் குறை சொல்ல முடியாத அளவிற்கு நான்கு வருடம் இரண்டு மாதங்கள் சிறப்பான முறையில் ஆட்சி செய்தார். கலைஞர் மகன் என்பதை தவிர வேறு எந்த தகுதியும் ஸ்டாலினுக்கு முதல்வராவதற்கு கிடையாது.
ஸ்டாலினுக்கு அடுத்து உதயநிதியை திமுகவினர் உருவாக்கினார்கள். இப்போது இன்பநிதியை உருவாக்கி வருகிறார்கள். தமிழகத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 28 தொகுதிகளில் ஆயிரம் வாக்குகளுக்கு குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது அதிமுக.
மத்தியில் ஒரே தலைவராக அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி உருவெடுத்து அகில இந்திய அளவில் முக்கிய தலைவராக மாறியுள்ளார். அதிக எம்பிக்களை கொண்ட பாஜகவின் பிரதமர் நரேந்திர மோடி எடப்பாடி பழனிசாமியை அருகில் அமர வைத்து கூட்டணியின் அடுத்த பெரிய தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்பதை உணர்த்தியுள்ளார்” என்று தெரிவித்தார்.
தென் மாவட்ட திமுகவில் சாதி மோதல் அபாயம்: ஸ்டாலினிடம் எச்சரித்த நிர்வாகிகள்!
ஒரே அறையில் 500 பேர்… கழிப்பறை வசதி கூட இல்லை: மணிப்பூர் சென்ற எதிர்க்கட்சி எம்.பிக்கள் வேதனை!
