இன்றைய தினமலர் நாளிதழின் முதல் பக்கத்தில், காலை உணவு திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய செய்தி வெளியிட்டதற்கு முதல்வர் கண்டனம் தெரிவித்த நிலையில், தினமலர் நாளிதழ் அதற்கு விளக்கமளித்துள்ளது.
அரசு பள்ளியில் ஆரம்ப கல்வி பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை தமிழக முதல்வர் ஸ்டாலின் மாநிலம் முழுவதும் சமீபத்தில் விரிவாக்கம் செய்தார். இதன் மூலம், பள்ளிக்கு காலையில் உணவருந்தாமல் வரும் மாணவர்கள், பசியால் வாடாமல், பாடத்தினை கவனிக்கின்றனர்.
சுமார் 17 லட்சம் மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற்று வரும் நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் இத்திட்டம் வரவேற்பை பெற்று வருகிறது.
காலை உணவு திட்டம் குறித்து செய்தி!
இந்நிலையில், இன்றைய (ஆகஸ்ட் 31) தினமலர் நாளிதழின் முதல் பக்கத்தில் மாணவர்களுக்கு பெரிதும் பலனளிக்கும் இத்திட்டத்தினை கொச்சைப்படுத்தும் விதமாக, “மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு, ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது” என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது.
அருவருக்கதக்க வகையில் வெளியான இந்த செய்திக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் மாணவ அமைப்பினர் மற்றும் திமுக கட்சியினர் தின மலர் நாளிதழை தீயிட்டு கொளுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தினமலர் நாளிதழின் இந்த செய்திக்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை! தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!” என தெரிவித்திருந்தார்.
உழைக்க ஓர் இனம் – உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் #சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்.
'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி… pic.twitter.com/M8H94rVn68
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) August 31, 2023
இதனையடுத்து எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் தினமலர் நாளிதழுக்கு எதிராக ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
தினமலர் ஆசிரியர் விளக்கம்!
இந்நிலையில், தினமலர் நாளிதழின் ஆசிரியர் கி.ராமசுப்பு இன்று வெளியான சர்ச்சைக்குரிய செய்தி குறித்து விளக்கமளித்துள்ளார்.
அதில், ”கி.ராமசுப்பு ஆசிரியராக கொண்ட தினமலர் சென்னை, கோவை, மதுரை, பாண்டிச்சேரி, திருநெல்வேலி, நாகர்கோவில் பதிப்புகளில் மேலே குறிப்பிட்ட செய்தி வெளிவரவில்லை.
ஆர். சத்தியமூர்த்தி ஆசிரியராக கொண்ட தினமலர் ஈரோடு, சேலம் பதிப்புகளில் இந்த செய்தி வெளியாகி உள்ளது.
திரு கி.ராமசுப்பு ஆசிரியராக கொண்ட தினமலர் சென்னை,கோவை ,மதுரை ,பாண்டிச்சேரி ,திருநெல்வேலி ,நாகர்கோவில் பதிப்புகளில் மேலே குறிப்பிட்ட செய்தி வெளிவரவில்லை.
திரு R. சத்தியமூர்த்தி ஆசிரியராக கொண்ட தினமலர் ஈரோடு,சேலம் பதிப்புகளில் இந்த செய்தி வெளியாகி உள்ளது
– கி.ராமசுப்பு,ஆசிரியர் pic.twitter.com/4yFEEkYbA5
— Dinamalar (@dinamalarweb) August 31, 2023
சத்தியமூர்த்தி கடந்த 23 வருடங்களாக இந்த இரண்டு பதிப்புகளையும் தனியாக நடத்தி வருகிறார். இருப்பினும் “தினமலர்” பெயரில் இப்படி ஒரு அருவருக்கத்தக்க, வெட்கி தலை குனியக் கூடிய செய்தி வெளியாகி இருப்பது மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது.
தினமலர் ஈரோடு, சேலம் பதிப்புகளில் வெளியாகி உள்ள இந்த செய்தி ஏற்புடையதல்ல வன்மையாக கண்டிக்கிறோம்” என்று ஆசிரியர் கி. ராமசுப்பு இதற்கு விளக்கமளித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
உச்சநீதிமன்றத்தில் காவிரி ஆணையம் அறிக்கை தாக்கல்!

Comments are closed.