கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் 200சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டின் இறுதியில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது அதிக அளவில் பிரபலப்படுத்தப்பட்டது டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறை.
டெபிட்/கிரெடிட் கார்டுகளைக் கொண்டு கடைகளில் பொருட்களை வாங்குவது சுமார் 15ஆண்டுகளுக்கு முன்பே பரவலாக நடைமுறைக்கு வந்துவிட்டது என்றாலும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கொரோனா பெருந்தொற்றும் ஒரு காரணமாக இருந்தது.
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்த காலகட்டத்தில்தான் அதிகரித்தது.
செல்போன் மூலம் பணப் பரிமாற்றம் செய்ய உதவும் யு.பி.ஐ தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்த பிறகு, தெருவோர டீக்கடை, பூக்கடைகளில் ரூ.5, 10எனக் குறைந்த அளவிலான தொகைகூட இந்த பணப் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் குறித்து மக்களவையில் ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கிஷன்ராவ் கரத் எழுத்து மூலம் அளித்த பதிலில்,
“டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க ரூபே கடன் அட்டைகள் மற்றும் குறைந்த மதிப்பு பீம் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஊக்கத்தொகைத் திட்டத்தை மத்திய அரசு இந்த நிதியாண்டில் அறிமுகம் செய்துள்ளது.
இதுதவிர, அரசின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக 2018-19ஆம் நிதியாண்டிலிருந்து நான்கு ஆண்டுகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் 200சதவிகிதம் உயர்ந்துள்ளது.
2018-19ஆம் நிதியாண்டில் 2,326.02கோடி என்ற எண்ணிக்கையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றன. 2021-22ஆம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 7,197.68 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
டிஜிட்டல் சேவைகளை தடையற்ற முறையில் வழங்க வங்கிகளும் புதிய தொழில்நுட்பங்களை உடனுக்குடன் ஏற்று செயல்படுத்துகின்றன.
பீம் யுபிஐ, யுபிஐ-123, ஆதார் பரிவர்த்தனை பாலம், ஏஇபிஎஸ் போன்ற பல முன்முயற்சிகள் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க மத்தியஅரசு, ரிசர்வ் வங்கி, தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகம் மற்றும் வங்கிகளால் செயல்படுத்தப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
ராஜ்
தமிழக சாலை பணிகள் – கட்கரி சொன்னது என்ன? தயாநிதி மாறன் பேட்டி!
திருவண்ணாமலைக் காரர்களும் இடைத் தேர்தலும்: எ.வ.வேலுவை புகழ்ந்த துரைமுருகன்