வைஃபை ஆன் செய்ததும் சென்னையில் நடந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு விழா வீடியோக்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன. digital thinnai who is next pm stalin message
அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
”தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் 110-வது விதியின் கீழ் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு சிலை அமைக்கப்படும் என்று குறிப்பிட்டார். அதன்படியே சிலை அமைக்கும் ஏற்பாடுகள் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வசம் ஒப்படைக்கப்பட்டன.
நவம்பர் 27 ஆம் தேதி வி.பி. சிங்கின் நினைவு நாள். அன்று சிலை திறப்பதென முடிவு செய்யப்பட்டு அதன்படியே நேற்று சென்னை மாநிலக் கல்லூரியில் சிலை திறப்பு நிகழ்வை நடத்தி, கலைவாணர் அரங்கில் அது தொடர்பான விழாவில் பேசினார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இந்த சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் தொடக்கத்தில் கலந்துகொண்டவர்களை எல்லாம் பெயர் சொல்லி வரவேற்றார். திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் திருமாவளவன், காதர் மொய்தீன், வைகோ உள்ளிட்டவர்கள் பங்கேற்ற நிகழ்வில் காங்கிரஸ் சார்பில் யாரையும் முதல்வர் தன் உரையில் குறிப்பிட்டு வரவேற்கவில்லை.
காரணம் வி.பி.சிங் சிலை திறப்பு நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தலைவர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. காங்கிரஸுக்கும் வி.பி.சிங்குக்கும் பழைய பகை இருக்கிறது அதனால் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று சிலர் விழாவிலேயே பேசிக் கொண்டனர்.
காங்கிரஸுக்கும் வி.பி.சிங்குக்கும் அன்று பல முரண்பாடுகள் இருந்தாலும் இன்றைய அரசியல் சூழலில் சாதி வாரி கணக்கெடுப்பு, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் பற்றியெல்லாம் ராகுல் காந்தியே அழுத்தம் திருத்தமாக பேசி வருகிறார்.
என்ன நிலவரம் என்று சத்தியமூர்த்தி பவனில் விசாரித்தபோது, ‘வி.பி.சிங் சிலை திறப்பு விழாவுக்கு காங்கிரஸுக்கு அழைப்பு வந்தது. ஆனால் மாநில தலைவர் அழகிரி நெல்லை சென்றிருந்ததால் அங்கிருந்து உடனடியாக சென்னை திரும்ப இயலவில்லை. மேலும் காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா இதில் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால் அவருக்கு 27 ஆம் தேதி முதுகு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால் அவரும் கலந்துகொள்ள இயலவில்லை’ என்கிறார்கள்.
திமுக தரப்பிலோ, ‘கே.எஸ்.அழகிரி, கோபண்னா தவிர காங்கிரஸில் வேறு தலைவர்களே இல்லையா?’ என்று கேட்கிறார்கள். சரி, காங்கிரஸ் இந்த விழாவில் கலந்துகொள்ளாத நிலையில் வேறு பல தகவல்களும் இரு கட்சி வட்டாரங்களிலும் சீரியசாக விவாதிக்கப்படுகின்றன.
நவம்பர் 26 ஆம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பேசும்போது, ‘தமிழ்நாடு-புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் நாம் கைப்பற்ற வேண்டும். நாம் கை காட்டுபவரே அடுத்த பிரதமர்’ என்று பேசினார்.
அடுத்த நாள் நவம்பர் 27 உதயநிதி பிறந்தநாளை ஒட்டி தொண்டர்களுக்கு எழுதிய மடலில், இந்தியாவில் ஒரு வலுவான மாற்று அணி அமைந்தது என்றால் அது 1988 உல் உருவான தேசிய முன்னணிதான். அதன் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர் கலைஞர்’ என்று வலிமையான மூன்றாவது அணியை அடிக்கோடிட்டு நினைவுபடுத்தியிருக்கிறார்.
இந்த நிலையில் மத்திய பாஜக அரசு திமுக மீது விசாரணை அமைப்புகள் மூலம் கடுமையாக தாக்குதல்களை தொடுத்து வரும் நிலையில், பாஜகவின் கோபத்தைத் தணிப்பதற்காக இந்த விஷயங்களை ஸ்டாலின் பயன்படுத்திக் கொள்கிறாரா என்ற சந்தேகம் காங்கிரசிலேயே சிலரால் எழுப்பப்படுகிறது.
கடந்த வாரம் நடந்த காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில், வரும் எம்பி தேர்தலில் காங்கிரஸ் 15 சீட்டுகள் கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து நெல்லை சென்ற காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘15 தொகுதிகள் வேண்டும் என்று நான் பேசவில்லை. கட்சியினர் தெரிவித்தனர். ஆனால் என் விருப்பம் கடந்த முறை போட்டியிட்டதை விட அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதே’ என்று கூறினார்.
இப்படிப்பட்ட பின்னணியில்தான், ‘நாம் கை காட்டுபவரே பிரதமர்’ என்று மாசெக்கள் கூட்டத்திலும், ‘1988 வலிமையான மூன்றாவது அணி’ என்றும் அடுத்தடுத்த நாட்களில் திமுக தலைவரான முதலமைச்சர் ஸ்டாலின் சுட்டிக் காட்டியிருக்கிறார். இது திமுக-காங்கிரஸ் இரு தரப்பிலும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘2019 நாடாளுமன்றத் தேர்தலிலேயே பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என்று சொன்னவர் ஸ்டாலின். அதன் பின் சென்னையில் நடந்த தேசிய தலைவர்கள் கலந்துகொண்ட தனது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணி கரைசேராது என்று அழுத்தமாக சொன்னவர்.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தன் கட்சி நிர்வாகிகளை ஊக்கப்படுத்த அப்படி பேசியிருப்பார். மற்றபடி காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணியை சிந்தாமல் சிதறாமல் கொண்டு செல்வதுதான் ஸ்டாலின் விருப்பம் திட்டம் எல்லாமே’ என்றனர்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுப்பு!
கலைஞர் விழாவை வேறு தேதிக்கு மாற்ற ஓபிஎஸ் வலியுறுத்தல்!
digital thinnai who is next pm stalin message