வைஃபை ஆன் செய்ததும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம் பற்றிய புகைப்படங்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் மெசேஜ் டைப் செய்ய தொடங்கியது.
“அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் செயற்குழு கூட்டம் ஜூன் 20ஆம் தேதி சென்னையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் ஜூன் 7 தேதியே நடைபெற்றிருக்க வேண்டியது.
அப்போது தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மகன் திருமண நிகழ்வுக்கு டிடிவி தினகரன் சென்றதால் செயற்குழு கூட்டம் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கூட்டத்தில் முக்கியமாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர், தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் டிடிவி தினகரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டபோது கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகித்த டிடிவி தினகரன் தலைவர் பதவியை காலியாக வைத்தார்.
அப்போது சிறையில் இருந்த சசிகலாவுக்காக இந்த பதவி காலியாக வைத்திருப்பதாக கட்சிக்குள் பேசப்பட்டது.
சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அவருக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையிலான அரசியல் ரீதியான உறவில் மெல்ல மெல்ல பிரச்சனை ஏற்பட்டதாகவும், இருவருக்கும் இடையே அரசியல் ரீதியான இடைவெளி ஏற்பட்டதாகவும் அமமுக நிர்வாகிகளே கூறினார்கள்.
மெல்ல மெல்ல சசிகலாவின் பெயரையோ படத்தையோ அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டங்களில் பயன்படுத்துவதை தவிர்த்தனர்.

இந்நிலையில்தான் அக்கட்சியின் முதல் அமைப்புத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தான் தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் பதவிக்கு யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இப்போது இருப்பவர்களில் கட்சியின் தலைவர் பதவியை யாருக்கு கொடுக்கலாம் என்று ஆலோசனையும் கட்சியில் தொடங்கியுள்ளது.
செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு அக்கட்சியின் முக்கியமான சில நிர்வாகிகள், ‘ஏற்கனவே டிடிவி தினகரனை வந்து சந்தித்தார் ஓ பன்னீர்செல்வம்.
அதன்பிறகு தினகரனும் தஞ்சாவூரில் வைத்திலிங்கத்தின் இல்ல திருமணத்தில் கலந்து கொண்டார். இருவரும் இணைந்து செயல்படுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்கள்.
அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி சட்டரீதியாகவும் தேர்தல் ஆணைய ரீதியாகவும் தலைமை பதவியை வலுவாக வைத்திருக்கிறார்.
இந்நிலையில் அங்கேயே ஒரு உதிரியாக இருப்பதை விட பன்னீர்செல்வம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பதவியை ஏற்றால்… தினகரன் ஓபிஎஸ் ஆகிய இருவரின் செல்வாக்கும் இணைந்து எடப்பாடிக்கு எதிராக வீரியமாக வெளிப்பட வாய்ப்பு உள்ளது.
இருவரும் இணைந்து அதிமுகவை விரைவில் மீட்கவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே பன்னீர்செல்வம் அமுமுக தலைவர் பதவியை ஏற்றுக்கொள்வாரா?’ என்று விவாதித்திருக்கிறார்கள்.

தினகரனுக்கு நெருக்கமானவர்கள் இந்த தகவலை அவரிடமே தெரிவிக்க… தனது ட்ரேட் மார்க் சிரிப்பை உதிர்த்தபடி சென்றிருக்கிறார் அவர்.
இதுகுறித்து பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மத்தியில் விசாரிக்கும் போது… ’அதிமுக ஒன்றுபட வேண்டும் அதற்காக ஓபிஎஸ் என்ன வேண்டுமானாலும் செய்வார்’ என்று பொதுவாக பதில் அளிக்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.