டிஜிட்டல் திண்ணை: அனைத்துக் கட்சிக் கூட்டம்… ஸ்டாலின் வைக்கும் ட்விஸ்ட்!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் கொடுத்த பிரஸ்மீட் வீடியோ இன்பாக்சில் வந்து விழுந்தது. all party meeting stalin

அதைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

ADVERTISEMENT

 “கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில், ‘மோடிக்கு எதிராக ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு’ என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டது.

அதில் மாநில உரிமைகள் பறிபோவது தொடர்பாக தொடர் போராட்டங்கள் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார் ஸ்டாலின். அதன் முக்கிய அம்சமாக, அடுத்த வாரம்  முக்கிய அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளார்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

அதன்படியே இன்று  (பிப்ரவரி 25) தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பிறகு, தானே செய்தியாளர் சந்திப்பை நடத்தினார் முதல்வர் ஸ்டாலின். அப்போது மாநில உரிமைகளை உச்சபட்சமாக நசுக்கும் வகையில் தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகள் 39 இல் இருந்து 31 ஆகக் குறைக்கப்படும் அபாயம் பற்றி விளக்கினார்.

குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தை செம்மையாக பின்பற்றியதற்காக தமிழ்நாட்டுக்கு தண்டனை போல  டிலிமிட்டேஷன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்து விவாதித்து முடிவெடுக்க வரும் மார்ச் 5 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் ஸ்டாலின்.

ADVERTISEMENT

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மாநில உரிமைகளை மீட்பவராகவும், நலத்திட்டங்களின் முதல்வராகவும் ஸ்டாலினை முன்னிறுத்துகிறது திமுக. அதேநேரம் தமிழ்நாட்டுக்கு வில்லனாக மத்திய அரசை முன்னிறுத்துகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை மட்டுமல்ல…  அதோடு கூட்டு சேரத் தயாராகும்  கட்சிகளையும் தமிழக நலனுக்கு எதிரானவர்களாக சித்திரிப்பதுதான் திமுகவின் பிரச்சாரத் திட்டமே.

அதனால்தான் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார் ஸ்டாலின். இதன் மூலம் திமுகவுக்கும், திமுக கூட்டணிக் கட்சிகளுக்கும் முழுமையான அரசியல் ஆதாயம் கிடைக்கும். இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒன்றிய பாஜக அரசின் இந்த டிலிமிட்டேஷன் திட்டத்துக்கு எதிராகத்தான் அனைத்துக் கட்சிகளும் பேசவேண்டியிருக்கும். இந்த சூழலில் பாஜகவை முற்றிலும் தனிமைப்படுத்துவது, பாஜகவோடு கூட்டு சேர்பவர்களை தமிழ்நாட்டின் எதிரிகள் என முத்திரை குத்துவது என்ற இரு  திட்டமும் திமுகவிடம் இருக்கிறது என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.

குறிப்பாக அதிமுக இந்த விஷயத்தில் பாஜகவுக்கு தனது வலிமையான கண்டனத்தை திமுக அளவுக்கு தெரிவிக்கவில்லை. பாஜகவோடு கூட்டணி இல்லை என்று அதிமுக தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாலும், உள்ளுக்குள் ஏதோ ஒன்று இரு கட்சிகளுக்குள்ளும் இழையோடிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் அதிமுகவையும் பிராண்ட் செய்யும் முயற்சியும் திமுகவிடம் இருக்கிறது என்கிறார்கள்.

நிர்வாக ரீதியான போராட்டம் ஒருபக்கம் என்றால், அரசியல் ரீதியான இந்த போராட்டத்தை வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் வரைக்கும் இதே சூட்டோடு இதே வேகத்தோடு தொடர்ந்து கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறது திமுக.

அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பின் அடுத்தடுத்த போராட்டங்களுக்கும் தயாராகிறார் ஸ்டாலின். தென்னிந்திய முதல்வர்களை சந்திப்பது, தென்னிந்தியாவுக்கான மக்களவைத் தொகுதிகளை இழக்காமல் தக்க வைப்பது உள்ளிட்ட போராட்டங்கள் தென் மாநிலத் தலைநகரங்களில் முன்னெடுப்பது ஆகியனவும் இதில் அடங்கும் என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப். all party meeting stalin

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share