வைஃபை ஆன் செய்ததும், டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாடு பற்றிய அப்டேட்டுகள் வந்து விழுந்தன.
அவற்றை பார்த்துக் கொண்டே whatsapp தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“ஜி 20 உச்சி மாநாட்டை ஒட்டி தலைநகர் டெல்லி விழாக்கோலமாய் ஜொலி ஜொலிக்கிறது. சீனா, ரஷ்யா தவிர மற்ற ஜி 20 உறுப்பினர்களின் தலைவர்கள் டெல்லியில் இறங்கி வருகிறார்கள்.
செப்டம்பர் 8 இரவு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பிரதமர் மோடியை சந்தித்தார்கள்.
டெல்லியில் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. உலகத் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டிருப்பதால் மத்திய பாதுகாப்பு படைகளும் சுற்றுவட்டார மாநில போலீசாரும் டெல்லி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
இந்த நிலையில் தான் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பேசிய உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன ஒழிப்பு பற்றி பேசியதற்கு பதில் தெரிவித்துள்ளார்.
‘ராவணன் சனாதனத்தை அழிக்க முயன்றார். முடியவில்லை. ஔரங்கசீப், பாபர் போன்றவர்கள் முயன்றார்கள். அவர்களால் முடியவில்லை. அவர்களாலேயே முடியாதது அரசியல் ஒட்டுண்ணிகளால் முடியவே முடியாது’ என்று பேசியிருக்கிறார் யோகி.
உதயநிதிக்கு எதிராக உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போலீசில் புகார்கள் பாஜகவினரால் கொடுக்கப்பட்டு வருகின்றன.
உத்திரபிரதேச மாநிலம் ராம்பூர், பைரேளி உள்ளிட்ட காவல் நிலையங்களில் உதயநிதி மீது புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதேபோல் பல இடங்களில் பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதயநிதி மீது இரு பிரிவுகளுக்கு இடையே கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக புகார் கொடுத்து இருக்கிறார்கள்.
உத்திரபிரதேசத்தில் இருக்கும் மூத்த பத்திரிகையாளர்களிடம் இது குறித்து விசாரித்த போது, ‘செப்டம்பர் ஆறாம் தேதி நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடியே சனாதன ஒழிப்பு பற்றி உதயநிதி பேசியதை குறிப்பிட்டு பாஜகவினர் அனைவரும் இதற்கு கடுமையாக எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
அதன் அடிப்படையில் பல்வேறு இடங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. காவல்துறை அதிகாரியிடம் கேட்டபோது இரு பிரிவினர் இடையே பகைமையை தூண்டுதல் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் உதயநிதி மீது புகார்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவர் பேசியதற்கு எந்த விளைவுகளும் சம்பவிக்காத நிலையில் வழக்கு பதிவு செய்ய முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் மேலதிகாரிகளிடம் கேட்டிருக்கிறோம் என்று கூறுகிறார்கள்.
பாஜகவினர் வட்டாரத்தில் விசாரித்த போது… ஜி 20 மாநாடு நடந்து கொண்டிருப்பதால் உலகத் தலைவர்கள் தற்போது டெல்லியில் இருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவை விட்டு கிளம்பும் வரை சனாதன ஒழிப்பு பற்றிய உதயநிதியின் பேச்சுக்கு எதிராக புகார்கள் பேட்டிகள் மட்டுமே கொடுக்க வேண்டும் என்றும்… ஜி 20 மாநாடு முடிந்த பிறகு உதயநிதிக்கு எதிராக பேரணிகள் ஊர்வலங்கள் நடத்த வேண்டும் என்று பாஜகவின் தேசிய தலைமை மாநில தலைமைகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக கூறுகிறார்கள். அவ்வாறு ஊர்வலங்கள் பேரணிகள் நடத்தும் போது ஏதேனும் மோதல்கள் நடந்தால் அதன் அடிப்படையில் உதயநிதி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும்… அவரை உத்திர பிரதேச நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்றும் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன’ என்கிறார்கள் அம்மாநில பத்திரிகையாளர்கள்.
திமுக தரப்பிலும் சட்ட வல்லுனர்கள் இது தொடர்பாக கூர்ந்து கவனித்து வருகிறார்கள். ஜி-20 மாநாட்டுக்கு பிறகு உதயநிதிக்கு எதிராக உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடக்க கூடும் என்பதுதான் தற்போதைய நிலவரம்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.