‘தமிழ்நாடு’ பெயர் இடம்பெற 25 எம்.பி.க்களை கொடுத்தீங்களா?: அன்புமணி கேள்வி!

Published On:

| By Kavi

25 எம்.பிக்களை எங்களுக்கு கொடுத்திருந்தால் பட்ஜெட்டில் தமிழ்நாடு இடம் பெற்றிருக்கும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று (ஜூலை 23) நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் பெயர்கள் கூட இடம் பெறவில்லை.

தமிழ்நாடு பெயர் இடம் பெறாததற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அன்புமணி ராமதாஸ், “எங்களை வெற்றி பெற வைத்திருந்தால் தமிழ்நாடு பெயர் இடம் பெற்றிருக்கும்” என்று கூறியுள்ளார்.

இன்று (ஜூலை 24) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒவ்வொரு மாநிலத்தின் பெயரை சொல்ல முடியாது. மொத்தம் 48 லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என ஒவ்வொரு மாநிலத்தின் பெயரையும் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது.

இந்தியா முழுவதும் 100 தொழிற்சாலைகளை தொடங்க இருக்கிறார்கள். அதில் தமிழ்நாடு வராதா என்ன?

கடந்த ஆண்டை விட தமிழ்நாட்டுக்கு அதிக ரயில்வே திட்டங்கள் வந்துள்ளன. பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றால் 25 எம்.பிக்களை ஜெயித்து கொடுத்திருக்க வேண்டும்.

தமிழ்நாட்டுக்கு எந்தெந்த துறைக்கு பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்பது குறித்து தரவுகளை எடுத்துக்கொண்டிருக்கிறோம். அதன் பிறகு இதுபற்றி விரிவாக பேசுகிறேன்” என்று கூறினார்.

69 விழுக்காடு இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் வீ.பாரதிதாசனை இன்று சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ் இவ்வாறு தெரிவித்தார்.

அன்புமணியின் பேச்சு சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

கல்வராயன் மலையை முதல்வர் அல்லது உதயநிதி பார்வையிட வேண்டும்! – உயர்நீதிமன்றம்

பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு… நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share