ஆகஸ்ட் 10 அன்று நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா நடித்து வெளியான ஜெயிலர்’ திரைப்படம் விக்ரம் படத்தின் வசூலை சமன்செய்து இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
முதல் இடத்தில் பொன்னியின் செல்வன் உள்ளது. உலக அளவில் 3வது வார முடிவில் ஜெயிலர் சுமார் 600 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியானாலும் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஜெயிலர் படத்தின் வெற்றி காரணமாக அப்படத்தின் இயக்குநர் நெல்சனுக்கு விலை உயர்ந்த காரை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்க இருப்பதாகவும் படத்தின் லாபத்தில் தனக்கு பங்கு வேண்டும் என்று ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் காசோலை ஒன்றை கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. ஆனால் அது பற்றிய எந்த ஒரு செய்தி குறிப்பையும் சன்பிக்சர்ஸ் வெளியிடவில்லை.
அண்ணாத்த படம் வெற்றி பெறாததால் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடிப்பதற்கான சம்பளம் குறைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.
தற்போது படம் வெற்றி பெற்றிருப்பதால் குறைக்கப்பட்ட ரஜினிகாந்த் சம்பள தொகை அல்லது அவரது விருப்பப்படி லாபத்தில் குறிப்பிட்ட தொகையை சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் வழங்கி இருக்கலாம் என்கிறது தமிழ் சினிமா வட்டாரம்.
‘ஜெயிலர்’ படத்தை பொறுத்தவரை இயக்குநர் நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவருக்குமே முக்கியமான படம்.
காரணம் ‘பீஸ்ட்’ படத்தின் எதிர்மறையான விமர்சனங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் படத்தை நெல்சன் இயக்குகிறார் என்றதால் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
அதேபோல, ‘தர்பார்’, ‘அண்ணாத்த’ படங்களின் தோல்விக்குப் பிறகு பெரிய வெற்றியை கொடுத்தாக வேண்டும் என்ற நிர்பந்தத்திலிருந்தார் ரஜினி.
ஆக, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தக் கூட்டணியில் உருவான ‘ஜெயிலர்’ ரசிகர்களால் பாக்ஸ் ஆஃபிஸில் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றிருக்கிறது.
படத்தின் வெற்றிக்கு காரணம் ரஜினிகாந்த் என்கிற ஒற்றை நடிகர் மட்டுமல்லாது இயக்குநர் நெல்சன், சிவராஜ்குமார்,
மோகன்லால், ஜாக்கி ஷெராப், ரம்யா கிருஷ்ணன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரின் கூட்டுக் கலவை, கூட்டு முயற்சி என்கின்றனர் விநியோக வட்டாரங்களில். ரஜினிகாந்திற்கு காசோலை இயக்குநர் நெல்சனுக்கு என்ன பரிசு கொடுக்கப்போகிறார் கலாநிதி என்கிற கேள்விக்கு
ரஜினிகாந்த் – நெல்சன் கூட்டணியில் சன்பிக்சர்ஸ் மீண்டும் ஒரு படத்தை தயாரிக்கும் திட்டம் இருப்பதாகவும் அந்தப் படத்திற்கான சம்பளத்தை இருமடங்கு அதிகரித்து கொடுக்க சன் பிக்சர்ஸ் முடிவு எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இராமானுஜம்