விக்ரம் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் துருவ நட்சத்திரம். dhruva natchathiram movie release postponed
முதலில் இயக்குனர் கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடிகர் சூர்யா நடிப்பதாக 2015-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன்பின் சூர்யா – கௌதம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து சூர்யா விலகி கொண்டார். அதன் பிறகு இந்த படத்தில் விக்ரம் நடிக்க ஒப்புக்கொண்டார்.
பல தடைகளுக்கு பின் துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்துடன் கௌதம் மேனனுக்கு முரண்பாடுகள் இருந்ததால், துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து, துருவ நட்சத்திரம் படப்பிடிப்பை முழுமையாக முடிக்க வேண்டும் என்று இயக்குனர் கௌதம் மேனன் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார்.
பல வருடங்களாக வெளியாகாமல் தள்ளிப்போன துருவ நட்சத்திரம் திரைப்படம் வரும் நவம்பர் 24-ஆம் தேதி வெளியாகும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் துருவ நட்சத்திரம் படத்திற்கு ஒரு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிம்புவை வைத்து “சூப்பர் ஸ்டார்” என்ற படத்தை இயக்குவதாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் 2018 ஆம் ஆண்டு ஆல் இன் ஆல் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் முன்பணமாக 2 கோடியே 40 லட்சம் ரூபாய் வாங்கி இருக்கிறார். அதன் பிறகு அந்தப் படத்தின் வேலைகள் நடக்காததால் அந்த முன் பணத்தை கௌதம் மேனன் திருப்பித் தர வேண்டும், அந்த பணத்தை திருப்பி தராமல் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று ஆல் இன் ஆல் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “ஆல் இன் ஆல் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் கௌதம் மேனன் வாங்கிய 2 கோடியே 40 லட்சம் ரூபாய் பணத்தை நவம்பர் 24 தேதி காலை 10.30 மணிக்குள் திரும்ப அளிக்க வேண்டும். பணத்தை திருப்பி தரவில்லை என்றால் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடக் கூடாது” என்று இயக்குனர் கௌதம் மேனனுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
#DhruvaNatchathiram #DhruvaNakshathram pic.twitter.com/dmD4ndEnp9
— Gauthamvasudevmenon (@menongautham) November 23, 2023
இதனைத் தொடர்ந்து இயக்குனர் கௌதமேனன் தனது எக்ஸ் பக்கத்தில் துருவ நட்சத்திரம் படம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகாது என்று ஓர் பதிவை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், “மன்னித்து விடுங்கள். இன்று (நவம்பர் 24) துருவ நட்சத்திரம் படத்தை திரையிட முடியவில்லை. இந்த பிரச்சனைகளை சரி செய்ய இன்னும் ஓரிரு நாட்கள் எங்களுக்கு தேவைப்படுகிறது. படத்திற்கான உங்களது ஆதரவு மன மகிழ்ச்சி அளிக்கிறது, மேலும் எங்களை ஊக்குவிக்கிறது. இன்னும் சில நாட்கள் தான். நாங்கள் மீண்டும் வருவோம்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பிரச்சனைகளுக்கு பிறகு மீண்டும் துருவ நட்சத்திரம் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் கன்னத்தில் கை வைத்தபடி பொறுமையாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
– கார்த்திக் ராஜா dhruva natchathiram movie release postponed
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…