“தோனி வெளிநாட்டு டி20 போட்டிகளில் பயிற்சியாளராகச் செயல்பட முடியாது” என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சென்னை ரசிகர்களால் செல்லமாய் ’தல’ என அழைக்கப்படும் தோனியையும் கிரிக்கெட்டையும் எப்போதும் பிரித்துப் பார்க்க முடியாது. தோனி கேப்டனாக இருந்தபோது பல முக்கியமான கோப்பைகளை இந்திய அணி வென்றிருக்கிறது.
2007ம் ஆண்டு நடந்த டி-20 உலகக் கோப்பை போட்டிதான் தோனியின் தலைமைப் பணியின் தொடக்கப் புள்ளி. அந்தக் கோப்பையை இந்தியா வென்றதன் மூலமாக அணியில் நிரந்தரமான இடத்தைப் பிடித்ததுடன் தலைமைப் பதவிக்கும் உயர்த்தப்பட்டார்.
2011ம் ஆண்டு உலகக் கோப்பை, 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை என பெருமைக்குரிய பல பட்டங்களை இந்தியா வெல்லும்போதும் தோனியே அணியின் கேப்டனாக இருந்தார். சர்வதேசப் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்றுவிட்டாலும் ஐபிஎல் தொடர்களில் அவர் தொடர்ந்து ஆடி வருகிறார்.
அதிலும் அவர் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிதும் மதிக்கப்படும், வெற்றி வாய்ப்புள்ள அணியாகவே திகழ்ந்து வருகிறது. இப்படி கிரிக்கெட் விளையாட்டுடன் தோனி தன்னை நெருக்கமாகத் தொடர்புபடுத்திக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி வெளிநாட்டு டி20 போட்டிகளில் பயிற்சியாளராக செயல்பட முடியாதென பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். டி20 போட்டிகள் போலவே, தென்னாப்பிரிக்காவிலும் புதிதாக டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் தங்களுக்கென அணியை வாங்கியுள்ளனர். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தனக்கென ஓர் அணியை உருவாக்கியுள்ளது.
இந்த அணிக்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் மற்றும் சிஎஸ்கே கேப்டன் தோனி பயிற்சியாளராக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், “தோனி வெளிநாட்டு டி20 போட்டிகளில் பயிற்சியாளராகச் செயல்பட முடியாது. அப்படி ஒருவேளை, அவர் பங்கேற்க விரும்பினால் ஐபிஎல் போட்டியில் இருந்து விலக வேண்டும்” என பிசிசிஐ தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, இந்திய வீரர்கள் வெளிநாட்டு டி20 போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்
நாமெல்லாம் ஒரே குடும்பத்தினர் : காமன்வெல்த் வீரர்களிடம் மோடி
