பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (நவம்பர் 12) காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
பாலிவுட் திரை உலகில் ஜொலித்த முதுபெரும் நடிகர் தர்மேந்திரா உடல் நலன் பாதிக்கப்பட்டிருந்தார். 89 வயதான தர்மேந்திரா கடந்த சில வாரங்களில் பல முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய பாதிப்பு மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் மும்பையில் உள்ள ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார்.
இந்நிலையில் அவர் நேற்று காலை உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அவரது மனைவியும் எம்பியுமான ஹேமமாலினி மற்றும் அவரது மகள் நடிகை ஈஷா தியோல் ஆகியோர் தர்மேந்திரா நலமுடன் இருப்பதை உறுதிப்படுத்தினர். இந்நிலையில் சிகிச்சைக்கு பின் இன்று காலை தர்மேந்திரா வீடு திரும்பி உள்ளார்.
“தர்மேந்திரா காலை 7.30 மணிக்கு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் . குடும்பத்தினர் அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனர். எனவே, இனிமேல் வீட்டிலேயே சிகிச்சை தொடரும்” என்று டாக்டர் பிரதித் சம்தானி பிடிஐயிடம் தெரிவித்தார்.
