மாணவர்களின் போராட்டம் எதிரொலியாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாடு வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. Dharmendra Pradhan Tamil Nadu visit cancelled
தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் தமிழகத்திற்கு ரூ. 2,152 கோடி கல்வி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார்.
இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாளை சென்னை ஐஐடி நிகழ்ச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகைத் தரவிருந்தார்.
அவரது வருகைக்கு எதிராக மாணவ அமைப்புகள் போராட்டம் அறிவித்தன.
ஐஐடி நுழைவு வாயிலில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தர்மேந்திர பிரதான் தமிழ்நாடு வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு பதிலாக மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுகந்த மஜூம்தார் வருகைத் தரவுள்ளார்.
இவரது வருகையை எதிர்த்தும் தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு போராட்டம் அறிவித்துள்ளது.
இன்று (பிப்ரவரி 27) வெளியிட்ட அறிவிப்பில், “தர்மேந்திர பிரதானின் பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பது தமிழகத்தின் உணர்வெழுச்சிக்கும், மாணவர்களின் போராட்டங்களுக்கும் கிடைத்துள்ள வெற்றியாகும்.
எனினும், ஐஐடி-யில் நடைபெறும் விழாவில் மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுகந்த மஜூம்தார் கலந்துகொள்வதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தர்மேந்திர பிரதான் என்ற ஒருவரை மட்டும் கண்டிப்பதல்ல, தமிழகத்துக்கு நிதி தர மறுத்து, இந்தியையும், தேசியக் கல்விக் கொள்கையையும் திணிக்க முனையும் மத்திய அரசைக் கண்டித்தே இந்தப் போராட்டம் என்பதால், மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுகந்த மஜூம்தாருக்கும் கருப்புக் கொடி காட்டுவது என்று மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.
திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் தலைமையில், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், இந்திய மாணவர் சங்கம், சமூக நீதி மாணவர் இயக்கம், தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ், திராவிட மாணவர் கழகம், திராவிட மாணவர் பேரவை, திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் நீதி மய்யம், மதிமுக மாணவர் அணி,மாணவர் இந்தியா, முற்போக்கு மாணவர் கழகம், முஸ்லிம் மாணவர் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் இணைந்துள்ள “மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு (FSO-TN)” சார்பில், சென்னை, ஐஐடி வாயிலில் “கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்” நாளை (பிப்ரவரி 28) காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ளது“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Dharmendra Pradhan Tamil Nadu visit cancelled