தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தர்மசெல்வன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். Dharmapuri East District DMK secretary removed
தருமபுரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த தடங்கம் சுப்பிரமணியத்தை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக தர்மசெல்வன் நியமிக்கப்படுவதாக கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.
இந்தநிலையில் தர்மசெல்வன் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. அதில், ”கலெக்டர், எஸ்.பி, அதற்கு கீழ் இருக்கும் அத்தனை நிர்வாகமும் நான் சொல்வதை தான் கேட்க வேண்டும். கேட்கவில்லையென்றால் அவர்கள் அந்த பதவியில் இருக்கமாட்டார்கள்” என்று மிரட்டும் தொனியில் பேசியிருந்தார்.
இதுகுறித்து மின்னம்பலத்தில், ”கலெக்டர், எஸ்.பி… நான் சொல்வதை தான் கேட்க வேண்டும்” : திமுக மா.செவின் அதிரவைத்த ஆடியோ!” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
தர்ம செல்வன் இவ்வாறு பேசியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த ஆடியோ விவகாரம் ஓய்வதற்குள் அடுத்த சர்ச்சையில் சிக்கினார் தர்மசெல்வன்.
தருமபுரி பெரியார் சிலை அருகே உள்ள தமிழக அரசின் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான டிராவல்ஸ் பங்களாவில் தருமபுரி கிழக்கு மாவட்ட ஒன்றிய, பேரூராட்சி, நகர கழக நிர்வாகிகள் கூட்டம் கடந்த மார்ச் 6 அன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தர்மசெல்வன் பேசும்போது, “நான் கட்சி கூட்டத்தில் பேசுவதை சிலர் ரெக்கார்ட் செய்து எனக்கு எதிராக செயல்படுகிறீர்கள். அவர்கள் அனைவரையும் கட்சியை விட்டு நீக்கிவிடுவேன்” என்று எச்சரித்தார்.
இதனால் சூடான பெரும்பாலான நிர்வாகிகள் எழுந்து, ”எங்களை நீங்க நீக்குறீங்களா, இல்லை உங்களை நாங்க நீக்குறோமான்னு பார்ப்போம்” என்று தர்மசெல்வனுக்கு எதிராக கோஷமிட்டபடி கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.
சொந்த மாவட்ட நிர்வாகிகளே மாவட்ட செயலாளருக்கு எதிராக வெடித்தது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மின்னம்பத்தில் மீண்டும் மீண்டும் சர்ச்சை… சிக்கும் திமுக மாசெ! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்தநிலையில் தர்மசெல்வனை தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து விடுவிப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (மார்ச் 18) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
“நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்” என்றும் தெரிவித்துள்ளார். Dharmapuri East District DMK secretary removed