“துரித நடவடிக்கை” : முதல்வருக்கு தருமபுரம் ஆதினம் நன்றி!

Published On:

| By Kavi

ஆபாச ஆடியோ, வீடியோ வெளியிடப்படும் என்று கூறி அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் மிரட்டல் விடுத்த விவகாரத்தில் துரித நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி என தருமபுரம் ஆதினம் தெரிவித்துள்ளார்.

தருமபுரம் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ இருப்பதாகவும், அதை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாகவும் கூறி பணம் கேட்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் மயிலாடுதுறை பாஜக மாவட்டத் தலைவர் அகோரம் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஆடுதுறை வினோத், திருவெண்காடு விக்னேஷ், பிரபல கல்வி நிறுவனத்தின் தாளாளர் குடியரசு, நெய்க்குப்பத்தை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

மொத்தம் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் தருமபுரம் ஆதினம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (பிப்ரவரி 29) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில நாட்களாகத் தருமபுர மடத்தில் சில அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் சில ரவுடிகள் சேர்ந்து போலியான ஆடியோ மற்றும் வீடியோ டேப்களை தயாரித்து மடத்தில் வேலை செய்பவர்களையும், மடத்தின் விசுவாசிகளையும் அணுகி மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்தனர்.

இதை சட்டரீதியாக எதிர் கொள்ள வேண்டும் என நாங்கள் காவல்துறையை நாடினோம். காவல்துறை, தமிழக முதல்வரின் ஆணைப்படி இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மிக துரிதமாக சட்டப்படியான நடவடிக்கை எடுத்துள்ளது.
எனவே, மிக துரிதமாக நடவடிக்கை எடுத்து எங்களையும், எங்கள் மடத்தின் பெருமையையும் காத்த காவல்துறைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தருமபுர மடத்தையும், எங்களையும் ரவுடிகளிடமிருந்து மீட்டெடுத்த நம் தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும், எம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஆசீர்வாதம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இவ்வழக்கின் எப்.ஐ.ஆரில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த திருக்கடையூரைச் சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமாருக்கு எந்த தொடர்பும் இல்லை என புகார்தாரர் விருதகிரி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்!

எலக்‌ஷன் ஃப்ளாஷ்: துரைமுருகன் மகனுக்கு சீட் உண்டா?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share