திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு திரையரங்கில் நடிகர் தனுஷுக்கு அவரது ரசிகர்கள் சிலை வைத்துள்ளனர்.
ஒவ்வொரு நடிகரின் திரைப்படம் வெளியாகும் போது அவரது ரசிகர்களுக்கு அது ஒரு திருவிழாவாகவே மாறிவிடுகிறது. பெரிய பெரிய கட்-அவுட்களை வைப்பது, அதற்கு அபிஷேகம் செய்வது, பட்டாசு வெடிப்பது என அவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதைக் காணலாம். சமீப காலமாக திரைப்பட வெளியீடுகளின் போது பொதுமக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிடுகின்றனர்.
அந்தவகையில் நெல்லை தனுஷ் ரசிகர்களின் கொண்டாட்டம் சற்று வித்தியாசமாக இருந்தது. தனுஷ் கதாநாயகனாக நடித்த பட்டாஸ் திரைப்படம் பொங்கல் தினமான ஜனவரி 15-ஆம் தேதி வெளியானது. அப்பா-மகன் என தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தநிலையில் நெல்லையில் அமைந்திருக்கும் திரையரங்கு ஒன்றில் பட்டாஸ் படம் வெளியாவதை முன்னிட்டு தனுஷுக்கு ஏழு அடியில் சிலை வைத்துள்ளனர். அறுபதாயிரம் ரூபாய் செலவில் வைக்கப்பட்டுள்ள இந்த சிலை, ‘வேட்டி சட்டை, கண்ணாடி அணிந்தபடி பட்டாஸ் பட கெட்-அப்பில் தனுஷ் நிற்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. பலரும் இந்த சிலைக்கு அருகில் நின்று புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர்.
இந்த செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையிலும், அந்த சிலை சற்றும் தனுஷ் போன்று இல்லை என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளது.
