இன்று ஒரே நாளில் அண்ணன் தம்பிகளான தனுஷின் வாத்தி, செல்வராகவனின் பகாசுரன் ஆகிய இரண்டு படங்கள் திரைக்கு வருகிறது.
சித்தாரா எண்டெர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் போர் சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா தயாரிப்பில், தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், நடிகர் தனுஷ், நடித்துள்ள படம் வாத்தி.
இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்ற பெயரிலும் வெளியாகிறது.
தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சாய்குமார், தணிகலபரணி, சமுத்திரக்கனி, தோடப்பள்ளி மது, சாரா, மொட்ட ராஜேந்திரன்,பிரவீணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். உலகம் முழுவதும் நேரடியாக தமிழ் மற்றும் தெலுங்கில் இன்று வெளியாகிறது.சென்னையில் காலை 8 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படுகிறது.

இதே நேரத்தில் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள பகாசூரன் படமும் இன்று வெளியாகிறது.
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை தொடர்ந்து மோகன் ஜி பகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி, ராதாரவி, தயாரிப்பாளர் கே.ராஜன், ராம்ஸ், சரவணன் சுப்பையா, தேவதர்ஷினி ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்துள்ளனர்.

மசாஜ், ஸ்பா போன்றவற்றில் வேலை செய்யும் பெண்கள், அந்த தொழிலுக்குள் எப்படி வருகிறார்கள்?,
ஆன்லைன் பாலியல் மோசடிகள் ஆகியவற்றை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள பகாசூரன் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஒரே நாளில் அண்ணன் செல்வராகவன் – தம்பி தனுஷ் படங்கள் மோதுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலை.ரா