கன்னட திரையுலகில் 1995ஆம் ஆண்டு வெளியான ‘ஓம்’ என்கிற கன்னட படத்தின் வெற்றியின் மூலம் அதிர்வுகளை ஏற்படுத்தியவர் இயக்குநரும், நடிகருமான உபேந்திரா.
ஓம் படத்தில் கதாநாயகனாக நடித்ததுடன் அப்படத்தை இயக்கியதும் உபேந்திரா என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மனைவி பிரியங்கா திரிவேதி நடித்துள்ள 50-ஆவது படம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரியங்கா திரிவேதி 90-களின் பிற்பகுதியிலும் 2000-ஆம் ஆண்டுகளின் முற்பகுதியிலும் பெங்காலி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தார்.
இவர் நடிக்கும் 50ஆவது படமான டிடெக்டிவ் தீக்க்ஷனா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (மார்ச் 2) வெளியானது.

படம் குறித்து பேசிய பிரியங்கா உபேந்திரா, “நான் அமெரிக்காவிலும் சிங்கப்பூரிலும் வளர்ந்தேன். பெங்காலி திரைப்படத் துறையில் எனது வாழ்க்கையைத் தொடங்கினேன். 1999 – 2003க்கு இடைப்பட்ட குறுகிய காலத்தில் பெங்காலி, இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் ஒடியா படங்களில் பணியாற்றினேன்.
அந்த நேரத்தில் பெரிய முன்னணி நடிகர்களாக இருந்த விஜயகாந்த் , விக்ரம் , பிரபுதேவா ஆகியோரது படங்களிலும் நடித்தேன்.
எனது முதல் திரைப்படம் பெங்காலி திரைப்படம், தேசிய விருது பெற்ற இயக்குநரான பாசு சாட்டர்ஜி இயக்கிய ஹதத் பிரிஷ்டி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்தது.
திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்த நடிகைகள் அதிகம் இல்லை. அப்படியே நடிக்க வந்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்வது அவ்வளவு சுலபமல்ல, யாருடன் நடிப்பது?. எந்த மாதிரியான கதைகளை தேர்ந்தெடுப்பது? மற்ற ஹீரோக்களுடன் நடித்தால் பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்ன மாதிரியான வேடங்களில் நடிக்கலாம் போன்ற பல குழப்பங்கள் இருந்தன.
ஆனாலும் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தேன். பெண்களை முதன்மைப்படுத்தி வரும் படங்களுக்கு மார்க்கெட் இருக்கிறது என்பது ஒரு புதிய வழியைத் திறந்து விட்டிருக்கிறது.
எனக்கு நிறைய திகில் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன, ஆனால் திகில் படங்கள் தொடர்ந்து செய்யக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
‘டிடெக்டிவ் தீக்ஷனா” என்னுடைய 50-வதுபடம். ஒரு கதையை கேட்கும்போது, அதை என் குழந்தைகளுடன் அமர்ந்து பார்க்கும் படமாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
நம் படங்களை பார்க்க வரும் ரசிகர்களை ஒரு போதும் ஏமாற்றிவிடக்கூடாது என்பதிலும், பெண்கள் மற்றும் குழந்தைகளை ஊக்குவிக்கும் பாத்திரங்கள் மற்றும் படங்களில் நடிக்க விரும்புகிறேன்.
சமூக வலைதளங்களில் பல திருமணமான பெண்கள் என்னை சக்திவாய்ந்த வேடங்களில் பார்க்கும்பொழுது தாங்கள் சக்தி வாய்ந்ததாக உணர்கிறேன் என்று என்னிடம் கூறுகிறார்கள். அதைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறேன்.
‘டிடெக்டிவ் தீக்ஷனா’ படத்தின் இயக்குனர் ரகு கடின உழைப்பாளி. நான் ஏற்கனவே அவருடன் பணியாற்றியிருக்கிறேன், அவருடைய அர்ப்பணிப்பு எனக்குத் தெரியும்.
படத்தின் கதையை என்னிடம் சொன்னபொழுது, இதுவரை யாரும்செய்திடாத கதாபாத்திரமாக எனக்கு தோன்றியது. எனவே நான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
உடல் மொழி, சின்ன சின்ன நுணுக்கமான விசயங்கள் கூட பார்த்து பார்த்து செய்திருக்கிறோம். இந்த கதாபாத்திரம் சக்திவாய்ந்த, அறிவார்ந்த, துணிச்சலான பெண்களை பிரதிபலிக்கிறது.
ஆண் ஹீரோக்களைப் பார்க்கும் பெண்கள் இப்போது பெண் சூப்பர் ஹீரோக்களை ‘டிடெக்டிவ் தீக்ஷனா”’வில் பார்க்கலாம்.
பெண்கள் சக்தி வாய்ந்தவர்களாகவும் புத்திசாலிகளாகவும் துணிச்சலானவர்களாகவும் இருக்க முடியும் என்பதையும், ஆண்களைப் போலவே குற்றங்களைத் தீர்க்க முடியும் என்பதையும் இந்தப்படம் சொல்கிறது.
‘டிடெக்டிவ் தீக்ஷனா’வை கன்னடம், தெலுங்கு, இந்தி, தமிழ், பெங்காலி ஆகிய மொழிகளிலும் வெளியிடுகிறோம்.” என்றார் பிரியங்கா உபேந்திரா.
இராமானுஜம்
நிஜ ‘வாத்தி’யை சந்தித்த தனுஷ் படக்குழு