தமிழ்நாட்டில் வழிபாட்டு உரிமை மறுப்பு: மோடியை ‘டேக்’ செய்த நிர்மலா சீதாராமன்

Published On:

| By Aara

Denial of right to worship in Tamil Nadu

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி தமிழகம் முழுதும் கோயில்களில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான பாஜகவினர் எல்.இ.டி. திரைகளை அமைத்துள்ளனர். Denial of right to worship in Tamil Nadu

இதேபோல காஞ்சி மாவட்டத்திலும் காமாட்சி அம்மன் கோயில் உட்பட பல கோயில்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்வில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பொது பிரார்த்தனை செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று காலை காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் 9 மணியளவில் அங்கே அமைக்கப்பட்ட எல்.இ.டி. திரைகளை போலீஸார் அகற்றினர்.

இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் தன்னுடைய எக்ஸ் தள பதிவில்,

“தனியார் நடத்தும் புகழ்பெற்ற காமாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில், பஜனைகள் 08:00 மணி முதல் தொடங்கின. ஆனால், சாதாரண உடை அணிந்த காவலர்களைக் கொண்டு இங்கே வைக்கப்பட்டிருந்த LED திரைகள் அகற்றப்படுகின்றன.

இது அயோத்தி பிராண பிரதிஷ்டை நிகழ்வை காண்பதற்கான வழிபாட்டு உரிமையை கடுமையாக மீறுவதாகும். தமிழகத்தில் உள்ள திமுக அரசு குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. இந்து விரோத திமுக இப்போது பிரதமர் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறது. போலீஸ் படையை வைத்து மக்களின் அபிலாஷைகளை நசுக்குகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 466 எல்இடி திரைகள் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 400 க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் திரைகளை பறிமுதல் செய்துள்ளனர் அல்லது நேரடி ஒளிபரப்பைத் தடுக்க படைகளை அனுப்பியுள்ளனர். எல்இடி சப்ளையர்கள் அச்சத்துடன் ஓடி வருகின்றனர். இந்து விரோத திமுக, சிறு வணிகர்களை தாக்குகிறது. தமிழில் இதை “வயித்திலே அடிப்பது” என்பார்கள்.

இதேபோல அறநிலையத்துறை வசம் உள்ள ஸ்ரீபெரும்புதூர் செல்வ விநாயகர் கோவில், தனியாரால் நடத்தப்படும் மொளச்சூர் கருமாரியம்மன் கோவில், தனியாரால் நடத்தப்படும் செல்விழிமங்கலம் ஜாம்போதை பெருமாள் கோவில் போன்ற கோவில்களில் காவல்துறையினரால் அன்னதானம் தடுக்கப்படுகிறது. திமுக அரசு காவல்துறையை பயன்படுத்தி அடக்குமுறையை தொடர்கிறது” என்று குற்றம் சாட்டியுள்ள நிர்மலா சீதாராமன், இந்த பதிவுகளை பிரதமர் மோடியை டேக் செய்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக காஞ்சிபுரத்தில்  செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘ஆன்மீகத்துக்கு மிக முக்கியமான மையம் காஞ்சிபுரம். இங்கே மக்களின் வழிபாட்டு உரிமையை போலீஸ் தடுக்கிறது. தமிழ்நாடு அரசு போலீசாரை தவறாக பயன்படுத்துகிறது. திமுக அரசு தனது இந்து எதிர்ப்பு உணர்வையும், தனிப்பட்ட முறையில் பிரதமர் எதிர்ப்புணர்வையும் வெளிப்படுத்துகிறது. அயோத்தியில் நடப்பதை நான் காண்பதற்கான உரிமையை தடுக்கிறது திமுக அரசு” என்று கூறினார்.

அதேநேரம் போலீசாரோ பொது இடங்களில் அனுமதி பெறாத எல்.இ.டி. திரைகளையே அகற்றுவதாக கூறுகிறார்கள்.
காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு பஜனை, வழிபாடுகள், அன்னதானம் நடத்த எந்த தடையும் இல்லை என்றும், எல்.இ.டி. திரை அமைக்க அனுமதி கோரப்படாததால் அகற்றப்பட்டுள்ளது என்றும் காஞ்சி மாவட்ட எஸ்.பி. விளக்கம் அளித்துள்ளார்.

வேந்தன்

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

ராமர் கோவில் திறப்பு: மோடி பயண விவரம்!

அயோத்தி சர்ச்சை: அறநிலையத் துறைக்குள் என்ன நடக்கிறது?

Denial of right to worship in Tamil Nadu

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share