புதுக்கோட்டையில் கலப்பு திருமணம் செய்ததால் திருவிழாவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட குடும்பங்களிடம் இருந்து தலைக்கட்டு வரி வசூலிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைகட்டு வரி
கிராமங்களில் கோவில்களில் திருவிழா நடத்துவதற்கு வரி வசூலிக்கப்படும். இதுவே, தலைக்கட்டு வரியாகும். தலைக்கட்டு வரி செலுத்தாதவர்கள் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கமாட்டார்கள்.
கலப்பு திருமணத்தால் அனுமதி மறுப்பு
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி நல்லூர் கிராமத்தில் கலப்பு திருமணம் செய்ததால் 25 குடும்பங்கள் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள ஊர் மக்கள் அனுமதி மறுத்துள்ளனர்.
கோவில் திருவிழா மட்டுமல்லாது எந்த ஒரு நிகழ்ச்சியில் கலப்பு திருமணங்கள் செய்தவர்கள் கலந்து கொண்டால் அவர்களுடன் யாரும் பேசி பழகக் கூடாது என்று கட்டுப்பாடுகள் நல்லூர் கிராமத்தில் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவர் இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் வேலு, “கலப்பு திருமணம் செய்தவர்களிடத்தில் தலைக்கட்டு வரி வசூலிப்பதில்லை. இதனால் கலப்பு திருமணம் செய்தவர்களால் திருவிழாக்களில் கலந்து கொள்ள இயலவில்லை.
எங்களிடம் வரி வசூலிக்க வேண்டும், அனைத்து திருவிழாக்களிலும் கலந்து கொள்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
நீதிமன்றத்தில் விசாரணை
இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 25) உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, “நவீன யூகத்தில் இதுபோன்ற விஷயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே கலப்பு திருமணம் செய்த 25 குடும்பத்திடம் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி தலைக்கட்டு வரி வசூலிப்பதை மாவட்ட ஆட்சியர் உறுதிப்படுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
கலப்பு திருமணம் செய்து கொண்ட காரணத்தால் எந்த நிகழ்ச்சிகளிலும் அனுமதி அளிக்கவில்லை. தற்போது, உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் இந்த சூழல் மாற்றம் பெறும் என்று கலப்பு திருமணம் செய்தவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மோனிஷா
முகத்தைப் பார்த்தாலே சாதியைக் கண்டுபிடிக்கும் பேராசிரியை சஸ்பெண்ட்!