சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயலை சேர்ந்தவர்கள் அய்யனார், சோனியா தம்பதியினர். இவர்களது மகன் ரக்ஷன் (வயது 4). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிரிகேஜி படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக ரக்ஷன் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது பெற்றோர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு ரத்த பரிசோதனை செய்தபோது ரக்ஷனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் மேல் சிகிச்சைக்காக செப்டம்பர் 6-ஆம் தேதி எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ரக்ஷன் உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவரது உடல் மதுரவாயல் இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. சிறுவனின் பெற்றோர்கள், உறவினர்கள், அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் சிறுவன் உயிரிழந்ததாக கூறி உடலை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு போராட்டத்தை தடுத்தனர்.
டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்